Show all

தனது தொகுதி வேளாண் பெருமக்களுக்காக பாராளுமன்றத்தில் முழங்கிய இராகுல்! அசைந்து கொடுக்குமா பாஜக?

பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் பெருமக்கள் அவல நிலைமை குறித்து பிரச்சினை எழுப்பினார். 

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முழங்கியதாவது: 
நாடு முழுவதும் வேளாண் பெருமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் உழவர்கள் நிலைமை படுமோசமாக இருக்கிறது. அங்கு 18 உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனது தொகுதியான வயநாட்டில் நேற்று ஒரு உழவர் தற்கொலை செய்துகொண்டார்.

வயநாட்டில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக சுமார் 8 ஆயிரம் உழவர்களுக்கு வங்கிகள் அறிவிப்பு அனுப்பி உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையாக, உழவர்களின் நிலங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்க உள்ளன.

இதனால் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை உழவர்கள் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்தில் உழவர்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. வேளாண் பெருமக்களுக்கு மோடி எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். அவற்றை எல்லாம் இந்தியத் தலைமை அமைச்சராக அவர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,211.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.