Show all

ஊரடங்கை முழுமையாகப் பயனாக்கிட, கொரோனாவுக்கு நாடு தழுவிய பரிசோதனை கட்டாயம்! ராகுல் காந்தி

கொரோனா தொற்று நோயை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல் நாடு தழுவிய அளவிலான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: காணொளி கலந்துரையாடல் மூலம் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:

கொரோனா நுண்ணுயிரித் தடுப்பை கேரளா மாநிலம் வெற்றிகரமாக தடுத்திருக்கிறது. இதை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். என்று மற்ற மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஊரடங்கு என்பது கொரோனா பரவல் தடுப்புக்கானது மட்டுமே. அதுவே முழுமையான தீர்வு போல நினைத்தால் ஊரடங்குக்கு முடிவேயில்லாமல் போய்விடும். ஊரடங்கு முடிந்த பின்னரும் கூட கொரோனா நுண்ணுயிரி உயிர்வாழத்தான் செய்யும்; பரவத்தான் செய்யும்.

ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு, மாநிலங்கள், மாவட்டங்கள் அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக நாடு தழுவிய அளவில் கொரோனா பரிசோதனைகளை நடத்திப் பார்க்க வேண்டும். இதற்கான வசதிகளை மாநிலங்களுக்கு நடுவண் அரசு செய்து தர வேண்டும். மற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சரக்குசேவை வரிகளின் மாநிலப்பங்கு நிலுவைத் தொகையை மாநில அரசுகளுக்கு நடுவண் அரசு கொடுத்து விட வேண்டும்.

நடுவண் அரசு மிகப் பெரிய நெருக்கடியை தள்ளிப் போட்டு வருகிறது. ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை நடுவண் அரசு உறுதி செய்ய வேண்டும். வேலை இல்லா திண்டாட்டத்தை சரி செய்ய நடுவண் அரசு தயாராக இருக்க வேண்டும்.

சிறு குறு தொழில்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கையை நடுவண் அரசு எடுக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் பிரச்சனையை நடுவண் அரசு கவனமுடன் கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டு, மாநில அரசு எல்லாம் பார்த்துகொள்ளும் விட்டுவிடும் என்றால், அதிக அதிகாரங்கள் நடுவண் அரசுக்கு எதற்கு? இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.