இந்தியாவிற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மற்றும் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார். 02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா-சீன எல்லையில் பதட்டத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய இராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மூவரில் ஒருவர் தமிழர் என்பதில், இந்திய இராணுவத்தில் தமிழர்கள் கூடுதலாக இடம் பெற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இந்த மோதலில் சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாற்பது அகவை, பழனி என்ற தமிழக வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. கடந்த 22 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தியாவிற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மற்றும் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்.
மோதலைத் தொடர்ந்து எல்லைப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துரையாடல் நடத்தி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



