நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. தன்னுடைய கண்டுபிடிப்பு மீது நடுவண் அரசு முடிவு ஏதும் எடுத்துத் தெரிவிக்காத நிலையில்- உயர்அறங்கூற்றுமன்றம் மதுரைகிளையில், மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு பதிகை செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன், வழக்கு பதிவு செய்த மனுவில், கொரோனா நுண்நச்சுத் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நுண்நச்சைக் கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த மருந்தை நுண்நச்சு ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை அறங்கூற்றுவர்கள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். கொரோனாவுக்கு சித்த மருத்துவர் தயாரித்த இம்ப்ரோ சித்த மருந்தை, நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டுமென உயர்அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. நடுவண் அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு அணியமாகி, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றின் ஆவணங்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரர் கண்டுபிடிப்பிற்கு ‘பேடண்ட் உரிமை’ கோருகிறார். நுண்நச்சு சோதனைக்கு முன் ஆய்வு முடிவுகள் சமர்பிக்கப்படவில்லை. அதனால், இவரது கண்டுபிடிப்பை இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் அணியமாகி, நடுவண் அரசின் ஆயுஷ் பரிந்துரைப்படி யுனானி மருத்துவத்திலுள்ள பெகிண்டா, உன்னாப், சபிஷ்டா போன்ற மருந்துகளும், ஆர்சனிகம் ஆல்பம் 30 சி, பிரையோனியா ஆகிய ஹோமியோபதி மருந்தும், தசமூல கபத்ராம் கசாயம், இந்துபாத கசாயம், வியக்ரியாதி கசாயம் ஆகிய ஆயுர்வேத மருந்துகளும், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகிய சித்த மருத்துகளும் தரப்படுகின்றன. சென்னை அரும்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆராய்ச்சி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து அறங்கூற்றுவர்கள் தமிழக அரசு தரப்பில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு முன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் அலுவலகத்தில் மனுதாரர் நாளை அணியமாகி, தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
இந்தக் கண்டுபிடிப்பை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து ஒருகிழமைக்குள் அறிக்கை பதிகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



