பிரித்தானிய அரசுகூட, அதிகாரத்தை நமக்கு விடுதலை தருவதற்கு முன்னமேயே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் நடுவண் பாஜக அரசு அதிகாரத்தைக் குவித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கையில்; தற்போது தமிழக கோயில்கள் மீது. 21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா விடுதலை பெறுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்புதான், முதல் முறையாக ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதனை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு இந்திய விடுதலைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு” தைமாதம், தமிழ்தொடர்ஆண்டு-5041ல் (பிப்ரவரி 1940) இந்தக் கட்டாய ஹிந்திக் கல்வியை விலக்கினார். திடீரென்று ஒருநாள் இரவு எட்டு மணிக்கு இந்;தியாவில் நடுவண் பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது மாதிரியெல்லாம் அதிரடியாக பிரித்தானிய அரசு அன்றைக்குத்தான் நமக்கு விடுதலையை வழங்கி விடவில்லை. வெள்ளையார்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது நம்மை ஆண்டு கொண்டிருந்தது நாமேதான். அப்படி நம்மை நாமே ஆண்டு கொண்டிருந்த போது, காங்கிரஸ் கட்சியும், ஆந்திரா கேரளா உள்ளடங்கிய சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பெற்றபோதுதான்- முதலாவது ஹிந்தித் திணிப்பும் அதையொட்டி ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இதை எதற்காக இப்போது நினைவில் கொண்டுவர வேண்டிய தேவையாகிறது என்றால்: பிரித்தானிய அரசு அதிகாரத்தை நமக்கு விடுதலை தருவதற்கு முன்னமேயே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் நடுவண் அரசில் பொறுப்பேற்றிருக்கிற பாஜக கொஞ்சம் கொஞ்சமாக மாநிலத்தின் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு பெயர் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி, ஒரே அடையாள அட்டை, ஒரே குடும்ப அட்டை, ஒரே சரக்குசேவை வரி, ஒரே நீட் தேர்வு, இப்பொழுது கோயில்கள் மீது ஒரே நிருவாகம் என்கிற செய்தி முன்னெடுக்கப்பட்டு தமிழக கோயில்களை தொல்லியல் துறை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. நடுவண் பாஜக அரசின் இந்த முயற்சிக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம் என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோவில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து, பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் தொல்லியல் துறை ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து, பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது. பா.ஜ.க.வின் கலாச்சாரத் திணிப்பை தமிழ்நாட்டில் எப்படியாவது அரங்கேற்றிட வேண்டும். தமிழைப் புறக்கணித்து, ஹிந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் திருக்கோவில்களிலும், நினைவுச் சின்னங்களிலும் தாலாட்டு பாட வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து இந்த ஆபத்து மிகுந்த விளையாட்டில் நடுவண் பாஜக அரசு ஈடுபட விரும்புகிறது. நடுவண் அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது; நடுவண், மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோவில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி. திருக்கோவில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பாஜக நடுவண் அமைச்சரின் இந்தச் செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அதிமுக அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க சங்ககால, பல்லவர், பாண்டியர், சோழர், சேரர், நாயக்கர் காலக் கட்டடக் கலை அம்சங்கள் நிறைந்த திருக்கோவில்களை எல்லாம் தமிழக அரசிடமிருந்து பறித்துக் கொண்டு, தமிழகத்திற்கே உரிய கலாச்சாரத்தை, பண்பாட்டை சிதைக்கத் துணியும் மன்னிக்க முடியாத துரோகம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திமுக ஒருபோதும் அனுமதிக்காது. நடுவண் அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வை மீறி, மாநில உரிமையை நசுக்கும் விதமாக, திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை, கலாச்சாரத்தை சிதைக்க நடுவண் பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால் அதை எதிர்த்து திமுக சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம்தமிழர் கட்சியின் சீமான், பாமகவின் இராமதாஸ் ஆகியோரும் தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகக் கோயில்கள் தற்போது ஹிந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் வேளையில் ‘தமிழ் சமய அறநிலையத்துறை’ என அதனைப் பெயர்மாற்றம் செய்யக் கோரி நாம் போராடிக் கொண்டிருக்கையில் மத்தியத் தொல்லியல் துறை தமிழகக் கோயில்களின் பராமரிப்பையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பது தமிழகத்தின் தன்னுரிமையைப் பறிக்கும் நடுவண் அரசின் எதேச்சதிகாரப்போக்காகும். என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



