கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு பார்த்து பார்த்து ஒரு கோட்டையை அமைத்துள்ளது. இதைப் பார்த்து நீங்களும் ஒன்றை கட்டினால் மகிழ்ச்சி. அதற்கு பதில் காழ்ப்புணர்ச்சியோடு இடித்து தரைமட்டமாக்கிவிட்டு எல்லோரும் முதலில் இருந்து தொடங்குவோம் என்பது எந்த விதத்தில் நியாயம்? 17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலுக்கு எதிராக என முன்னெடுக்கப்பட்டு வரும், பொது முடக்கத்தால் வரலாறு காணாத பாதிப்பில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு ஆகியவை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நடுவண் பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதமும் ஓங்கி முழக்கப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து கண்டறிந்தவுடன் கொரோனா காணாமல் போய்விடும், இதனால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் சில ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டுவிடும் ஆனால் புதிய கல்விக்கொள்கை மூலம் ஏழை, எளிய, மாணவர்களின் கல்விக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் வருகிறது. அதில் உள்ள தந்திரங்களுக்கு குழந்தைகள் இலக்காகும் பட்சத்தில் இருண்ட எதிர்காலமே கண்முன் தோன்றுகிறது என போர்க் கொடி தூக்குகிறார்கள் தமிழ்நாட்டு கல்வியாளர்களும் பெற்றோர்களும். காங்கிரசு ஆட்சி காலத்தில் ஹிந்தித் திணிப்பிற்காக மும்மொழிக் கொள்கை புகுத்தப்பட்ட போது, அதை மற்ற மாநிலங்களைவிட தீவிரமாக எதிர்த்தது தமிழ்நாடு. நூற்றுக்கணக்கானோர் இன்னுயிர் ஈந்து ஹிந்தி திணிப்பு தடுக்கப்பட்டது. தாய்மொழியாம் தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது, உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கொண்டுவரப்பட்டது. தற்போது நடுவண் பாஜக அரசு- 1.ஹிந்தித் திணிப்பு, 2.மாநில அதிகாரப் பறிப்பின் அடுத்த கட்டம் 3.ஏழை எளிய மாணவர்களுக்கு மேல்நிலை ஆய்வுக் கல்வியை மறுக்கும் உபாயம். 4.இந்தியாவின் அனைத்து அதிகாரத்தையும் வடபுல மக்களுக்கான பட்டயமாக்குதல் 5.இந்தியாவின் தொன்மொழி தமிழே என்று உலக அளவில் உண்மையை நோக்கிய ஆய்வுகள் முன்னெடுக்கப் படுவதை முறியடிக்கவும். 6.நாவலந்தேயம் என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்தே இந்தியா என்ற சொல்லை ஐரோப்பியர்கள் முன்னெடுத்தனர் என்கிற ஆய்வை முடிவுக்கு கொண்டு வரவும். 7.தமிழகத்தின் அடிப்படையில் இந்தியாவின் பல மாநிலங்கள் தங்கள் கலாச்சார வேறுபாட்டை கண்டறிந்து தூக்கிப் பிடிக்கிற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், 8.இராமயணம் மற்றும் பாஞ்சாலி பாண்டவர் தொல்கதையையும் விட அதிக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிற நிலையால் திருக்குறளின் தனித்துத்துவத்தை முடக்கவும் 9.இந்தியாவிலேயே அதிகமான கல்வி நிறுவனங்களை கொண்டிருக்கிற தமிழகத்தின் தனித்துவத்தை முறியடிக்கவும், 10.இந்தியாவின் பொருளாதாரத்தின் எண்பது விழுக்காட்டை உற்பத்தி செய்கிற தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வளர்ச்சியை முறியடிக்கவும் என பல்வேறு சூழ்ச்சிகளை உள்ளடக்கி, புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திருக்கிறது நடுவண் பாஜக அரசு. நடுவண் பாஜக அரசு வெளியிட்டுள்ள இந்தப் புதிய கல்விக்கொள்கையில் 66 இடங்களில் சமஸ்கிருதத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. அறுபதுகளில் ஹிந்தி திணிப்பு முயற்சி நடைபெற்றது போல் இப்போது சமஸ்கிருத திணிப்பு நடைபெறுகிறது. 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகளாலேயே மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகும் போது 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் அவை எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்? எட்டு அகவைக் குழந்தையிடம் மதிப்பெண்ணை மட்டுமே வாழ்வின் இலக்காக காட்டி பிழிந்து எடுப்பதன் மூலம் கற்பனை வளத்தை சிதைத்து தேவையற்ற மன அழுத்தத்தை கூட்டும் வேலை மட்டுமே இதில் நடக்கும். ஒரு சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி 100 விழுக்காடு வர வேண்டும் என்பதற்காக சில மாணவர்களை ஒன்பதாம் வகுப்பிலேயே நிறுத்தி வைப்பதையும், பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே 11ஆம் வகுப்புக்கு அனுமதி என்று சொல்வதையும் இப்போதே பல இடங்களில் பார்க்கிறோம். அப்படியிருக்க 3ஆம் வகுப்பிலேயே மாணவர்களை நிறுத்தி வைக்கும் பணியைத் தான் இந்த புதியக் கல்விக் கொள்கை ஏற்படுத்த போகிறது. தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் தொடர்ந்து படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்படும். இதனாலே தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கையால் அந்த நோக்கம் இனி சிதைக்கப்படும். “மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதல்ல. அவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெறுவதற்குத் தகுதியானவர்களாக உருவாக்கிட வேண்டும் என்பதே அதன் உட்பொருள். தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத் தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது, தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மேல் வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடை நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி அனைவருக்கும் கல்வி என்பது செயலாக்கத் தொடர்பற்றுப் போகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர்கள் என்று இந்த புதியக் கல்விக் கொள்கை குறித்து 2016ஆம் ஆண்டே கலைஞர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறினார். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு தொழிற்கல்வி என கவர்ச்சிகரமாக கூறப்பட்டாலும் இதற்கு பின்னால் உள்ள ஆபத்தை அறுபதாண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாடு இனம் கண்டு விரட்டியது. வர்ணாசிரமப்படி முன்னோர் செய்த தொழிலையே தொடர வேண்டும் என்ற கொடுமையை கொஞ்சம் மாற்றி குலக்கல்வித் திட்டமாக ராஜாஜி கொண்டு வந்தபோது தமிழ்நாடு அதை நிராகரித்தது. அத்தகைய ஆபத்து இந்த புதிய கல்விக் கொள்கையிலும் இருக்கிறது. “பழைய கல்வி முறைகளான குருகுலம், பாடசாலை போன்றவற்றை அறிமுகப்படுத்துதல், 3,5,8ஆம் வகுப்புகளில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிதல், 8ஆம் வகுப்புடன் பொதுக் கல்வியை முடித்துவிட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை எதிர்காலப் படிப்பிற்கான பாடங்களை தேர்வு செய்து படித்தல், 8ஆம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழிக் கல்வி, அனைத்து மாநிலங்களிலும் மும்மொழிக் கல்வித் திட்டம், 12ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதை கட்டாயமாக்குதல், தொடக்கக் கல்வியில் சத்தான காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குதல், கல்வித்துறை சார்ந்த உயர் அமைப்புகளை கலைத்துவிட்டு தேசிய கல்வி ஆணையத்தை அமைத்தல், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் என்டிஎ எனப்படும் அமைப்பு உருவாக்கி நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தல், தேசிய அளவிலான எக்ஸிட் தேர்வு எழுதி முதுநிலை மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.” பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றொரு அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகளைத்தான் தமிழ்நாடு ஒவ்வொரு முறையும் நொறுக்கி அனைத்து மாணவர்களையும் உயர் கல்விக்கு அழைத்து வந்துள்ளது. நுழைவுத் தேர்வு என்ற பெயரில் நீ எல்லாம் கல்லூரிக்கு வராதே என மறைமுகமாக சொல்லும் முறை மக்களாட்சி மாண்புக்கு எதிரானது. நீட் தேர்வு மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு நசுக்கப்பட்டு அவர்களை பாடையில் ஏற்றும் வேலை தற்போது நடந்துகொண்டிருக்கிறதல்லவா, அது இனி அனைத்து துறைகளிலும் நடக்கும் என பட்டவர்த்தனமாக அறிவிக்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு தொழிற் கல்லூரியாவது தொடங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தரமான முறையில் இயங்குகின்றன. சிறு நகரங்களில்கூட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. நடுவண் பாஜக அரசு இப்போது அறிவிக்கும் திட்டங்கள், எதிர்கால இலக்கு எல்லாம் பின்தங்கிய வட மாநிலம் ஒன்றில் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். அவை எல்லாம் தமிழ்நாட்டின் பழைய பாடதிட்டங்கள். தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 2018ஆம் ஆண்டு 26.3 விழுக்காடு இருக்கும் நிலையில், அதை 2035ஆம் ஆண்டில் 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. தமிழ்நாட்டின் சேர்க்கை விழுக்காடு என்ன தெரியுமா? 49விழுக்காடு. நடுவண் அரசு இன்னும் 15 ஆண்டுகள் கழித்து அடைய வேண்டும் என்ற இலக்கு வைக்கிறது, அதை கிட்டதட்ட இப்போதே தமிழ்நாடு கடந்துவிட்டது. அப்படியானால் நடுவண் அரசு பாடம் கற்க வேண்டியது தமிழ்நாட்டிடம் இருந்துதான். இவை அனைத்தும் திராவிட இயக்க அரசுகளின் முயற்சியால் விளைந்தவை. நடுவண் அரசின் முட்டுக்கட்டைகளை புறந்தள்ளி சாதித்தவை. இவற்றை நடுவண் அரசு வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமானால் அவர்கள் முதலில் பின்பற்ற வேண்டியது தமிழ்நாடு முன்னெடுத்த சமூக நீதிக் கொள்கைகளை. உயர்கல்வியில் புதிதாக 3.50 கோடி இடங்கள் உருவாக்குவது தேசிய கல்விக் கொள்கையின் இலக்காக உள்ளது. எப்படி இது சாத்தியமாகும்? மூன்றாம் வகுப்பிலேயே ஒரு குழந்தையிடம் உனக்கு கல்வி வராது, தேர்வில் நீ தோற்றுப் போய்விட்டாய் என்று சொன்னால், ஆறாம் வகுப்பில் உன் தந்தை பார்த்த வேலைக்கு போ என்று சொன்னால், நுழைவுத் தேர்வில் நீ 0.005 மதிப்பெண் குறைவாக எடுத்திவிட்டாய் என்று சொன்னால் எப்படி உயர்கல்வியில் புதிதாக மூன்றரை கோடி இடங்கள் உருவாகும்? மாணவர்களை எப்படி பள்ளிக்கு அழைத்து வருவது, எப்படி தக்கவைப்பது, அவர்களது தேவைகள் என்னென்ன, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு உயர் கல்விவாய்ப்பை எப்படி வழங்குவது, வேலை வாய்ப்பை எப்படி ஏற்படுத்திக் கொடுப்பது என கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு பார்த்து பார்த்து ஒரு கோட்டையை அமைத்துள்ளது. இதைப் பார்த்து நீங்களும் ஒன்றை கட்டினால் மகிழ்ச்சி. அதற்கு பதில் காழ்ப்புணர்ச்சியோடு இடித்து தரைமட்டமாக்கிவிட்டு எல்லோரும் முதலில் இருந்து தொடங்குவோம் என்பது எந்த விதத்தில் நியாயம்?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.