சொகுசு காரில் வலம்வந்து பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த பேரறிமுகச் சாமியாரை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். 23,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சொகுசு காரில் வலம்வந்து பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த பேரறிமுகச் சாமியாரை இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில், சிறீ சர்வமங்களப் பீடத்தை நிறுவி அதனுடைய மடாதிபதியாக வலம்வந்த, சாந்தா சுவாமிகள் என்பவர்தான் அந்தச் சாமியார். அரசுப் பணியிலிருந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு வேலூரை அடுத்துள்ள சிறீபுரம் தங்கக்கோயில் சாமியாரான சக்தி அம்மாவுக்கு சேவை செய்வதற்காக அரசுப் பணியை விட்டு விலகினார். தங்கக்கோயில் சாமியாரிடமிருந்து விலகி தனியாக ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உட்பட பக்கத்து மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று குடமுழுக்கு நடத்துவது, யாகம் வளர்ப்பது, கோ மாதா பூஜை செய்வது எனப் பல்வேறு சிறப்பு பூஜைகளை முன்னின்று நடத்திவந்தார். பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் பலருடனும் சாந்தா சாமியார் நட்பு பாராட்டுவதால், பேரறிமுகமடைந்து செல்வாக்கும் கூடியது. இதனால், ஹிந்து ஆச்சரிய சபா என்ற அமைப்பின் தமிழகத் தலைவராகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா சாமியார் நியமிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனிடையே, பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவருடன் சாந்தா சாமியாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த ரெட்டி மூலமாக சாமியார் அறக்கட்டளையைத் தொடங்கியதாகவும் சொல்கிறார்கள். சாமியாரின் வளர்ச்சிக்காக கமலக்கார ரெட்டி சொகுசு காரையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த சொகுசு காரில்தான் சாந்தா சாமியார் பூஜைகளுக்காக சென்றுவருகிறார். சாந்தா சாமியாரின் பணப்பரிவர்த்தனைத் தொடர்பான மொத்த கணக்கு வழக்குகளையும் கமலக்கார ரெட்டிதான் கவனித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தன்னைத் தேடி வரும் பக்தர்களில் வசதியானவர் யார்? என்பதை தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபடத் தொடங்கினார் சாந்தா சாமியார். பெங்களூருவில், தனக்குத் தெரிந்த பெரிய மனிதர் இருக்கிறார். அவருடன் இணைந்து வணிகம் செய்கிறேன். நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்புப் பணம் கிடைக்கும் என்று பக்தர்களிடம் பணத்தாசை கதை அளந்திருக்கிறார். சாமியாரின் பேச்சை நம்பி ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த பென்ஸ் பாண்டியன், ஹரீஸ்குமார் ஆகியோர் 10 லட்சம் ரூபாயும், சங்கர் என்பவர் 10 லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளனர். இவர்களைப் போலவே, வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவர் 45 லட்சம் ரூபாயை சாந்தா சாமியாரிடம் கொடுத்துள்ளார். இவ்வளவு பணத்தையும் பெற்றுக்கொண்ட சாமியார், பெங்களூருவிலிருந்து தன்னை இயக்கும் கமலக்கார ரெட்டியை வரவழைத்து பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். பணத்தை கொடுத்தவர்களிடம் சில மாதங்கள் கழித்து, என்னுடைய பங்குதாரர் ஏமாற்றிவிட்டார். உங்களது பணத்தை எப்படியாவது புரட்டி நானே கொடுத்துவிடுகிறேன் என்று நாடகமாடியிருக்கிறார். பணத்தை இழந்த நால்வரும் சாமியாரையே வட்டமடித்துக் கொண்டிருந்தனர். அவரும் பணத்தைத் தருவதாக இல்லை. இவர்களும் விடுவதாக இல்லை என்கிற கதையாக மாதங்களும் உருண்டோடின. பணத்தைக் கொடுத்தவர்கள் நச்சரித்தபோது, ஆத்திரமடைந்த சாந்தா சாமியார், ‘சூனியம்’ வைத்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட நால்வரும் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மயில்வாகனைச் சந்தித்து சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகியப் பிரிவுகளின்கீழ் ஆற்காடு காவல்நிலையத்தில் மூன்று வழக்குகளும், வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என சாந்தா சாமியார்மீது நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட சாந்தா சாமியாரை நேற்று கைது செய்த காவல்துறையினர் அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தி அரக்கோணம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். சாந்தா சாமியாரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி மற்றும் ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை புனிதவள்ளி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



