Show all

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள்: உதாசீன பாஜக

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாம்புக் கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்

என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     தேசிய தென்னிந்திய ஆறுகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.      ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளை கழுத்தில் மாட்டிக் கொண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,

தாங்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் மண்டை ஓடுகளை வரிசையாக அடுக்கி ஒரு சுடுகாட்டு சூழலை உருவாக்கி போராட்டம் நடத்தினார்கள்.

தூக்குக்கயிறு போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கயிற்றில் தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு, விவசாயிகள் கஷ்டங்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களை வந்து சந்திக்கும் டெல்லி வாழ் தமிழர்களிடமும் இதுகுறித்த விளக்கங்களை அளித்தனர்.

இதே போன்று விவசாயி ஒருவருக்கு மாலையிட்டு, வாயை கட்டி, நெற்றில் நாணயம் ஒட்டி சவத்தைப் போன்று படுக்க வைத்து போராட்டம் நடத்தினார்கள். அந்த சவத்தைச் சுற்றியும் மண்டை ஓடு எலும்புகளை வைத்தும் சங்கு ஊதியும் நூதன முறையில் போராட்டத்தை விவசாயிகள் நிகழ்த்தினார்கள்.

     எந்த வடிவில் சொன்னாலும் புரியாத நடுவண் அரசிற்கு விளங்க வேண்டும் என்பதற்காக எலிக் கறி உண்ணும் போராட்டத்தை விவசாயிகள் இரு நாட்களுக்கு முன் நடத்திக் காட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து, இன்று பாம்புக் கறி தின்று விவசாயிகள் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். பச்சையாக பாம்பின் கறியை எடுத்து வாயில் கடித்தவாறு விவசாயிகள் அனைவரும் போராட்டக்களத்தில் அமர்ந்துள்ளனர்.

     இதெல்லாம் மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மோடிக்கும் புரியுமா என்று கூட தெரியவில்லை. தமிழகத்தில் தனது பிள்ளைகள், உறவினர்களை விட்டுவிட்டு டெல்லி சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது கிஞ்சித்தும் நடுவண் அரசுக்கு அக்கறை இல்லை.

     இதில் தமிழக பாஜக தலைவர்கள் போராட்டக்காரர்களை கிண்டல் செய்யும் அவலம் வேறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.