Show all

அன்னிய நாட்டவர்களுக்கும் ஆதார் கிடைத்தது எப்படி? கொடுத்தது யார்?

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக நுழைவதற்கு மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டம் நுழைவு வாயிலாக உள்ளது.

இந்நிலையில், இந்த மாவட்டத்தின் செவோக்கே சாலையில் இருக்கும் ஒரு உணவகத்தில் ராணுவ உளவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

அப்போது, சீனாவை சேர்ந்த புகுவாங் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோர் இந்தியாவை சேர்ந்த பப்பாய் அகர்வால் என்பவர் மூலமாக இந்தியாவுக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், புகுவாங் மற்றும் கணேஷ் பட்டாராய் ஆகியோர் தங்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் கூடிய இந்திய ஆதார் அட்டைகளை வைத்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த பப்பாய் அகர்வால்,  நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பட்டாராய் ஆகியோரை கைது செய்துள்ள அதிகாரிகள், சீனாவை சேர்ந்த புகுவாங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான பப்பாய் அகர்வால், கணேஷ் பட்டாராய் ஆகியோர் இன்று அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.