இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல தலைமைஅமைச்சர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. 20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: முதல் தடுப்பூசியைத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி போட்டுக்கொண்டு நாட்டுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிசீல்டு கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர் மற்றும் புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தையும் அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இதற்கு முதலாவதாக எதிர்ப்பை பதிவு செய்தவர் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி. மேலும் தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறுகையில், ‛கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்துக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3ம் கட்ட பரிசோதனையில் இருக்கின்ற நிலையில் முன்கூட்டியே வழங்கியுள்ளது ஆபத்தானது. தடுப்பூசியின் முழு பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருக்குமாறு ஒன்றிய நலங்குத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தனை கேட்டுக்கொள்கிறேன், என்ற கூறியுள்ளார். இந்நிலையில் பீகார் மாநில காங்கிரசின் தலைவர் அஜித் சர்மா கூறியதாவது: புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது குறித்து மக்களிடையே ஐயம் உள்ளது. இந்த ஐயத்தை நீக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல தலைமைஅமைச்சர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.