அன்றாடம் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகள் படிப்புக்காக தொலைக்காட்சி வாங்கினேன். என்கிறார் கருநாடகத்தில் ஒரு தாய். 17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான இறுதியான முடிவுகளை நடுவண் மற்றும் மாநில அரசுகள் இன்னும் எடுக்கவில்லை. இதனால், பல்வேறு பள்ளிகளும் இயங்கலை வழியாக வகுப்பு எடுத்து வருகின்றன. இதனால், ஏழை மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இயங்கலை வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலையில் நன்றாகப் படிக்கும் திறமை உள்ள மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவையும் கையில் எடுக்கின்றனர். இதனால், இயங்கலை வகுப்புகளுக்கு எதிர்ப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநிலங்களில் தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இதனால் தொலைக்காட்சி கூட இல்லாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தை பொறுத்து வரை கலைஞர் தொலைக்காட்சி வீடு வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கான குறைந்த கட்டண இணையத்தொடர்புச் சேவையையும் செயலலிதா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதால் இதுதொடர்பான விவாதங்களும் இருந்து வரும் நிலையில் கர்நாடக மாநிலமும் தொலைக்காட்சியின் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தன் குழந்தைகளின் கல்வி எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக அம்மாநிலத்தில் கடக் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது தாலியை அடமானம் வைத்து குழந்தைகளின் கல்விக்காகத் தொலைக்காட்சி வாங்கியுள்ள செய்தி பலரையும் நெகிழ வைத்துள்ளது. இதுதொடர்பாகக் குழந்தைகளின் தாய் கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசிரியர் எங்களை தொலைக்காட்சி வாங்க வலியுறுத்தினார். ஆனால், எங்களிடம் அதற்கான பணம் இல்லை. அன்றாடம் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகள் படிப்புக்காகத் தொலைக்காட்சி வாங்கினேன் எனத் தெரிவித்துள்ளார். இப்படி மக்கள் அவதிப்பட்டு தம் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் நிலையில்தான், அந்தக் குழந்தைகளுக்கு பிஞ்சு அகவையில் நஞ்சும் புகட்டும் கயமைத்தனமாக மும்மொழிகளை மூன்று அகவையிலிருந்தே திணிக்க புதிய கல்விக் கொள்கையை முன்னெடுத்திருக்கிறது ஆர்எஸ்எஸ் சிந்தாந்த கார்ப்பரேட் ஆதரவு நடுவண் பாஜக அரசு.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.