நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. மக்கள் வருமானத்திற்கு பெரும்பாலான தொழில் வணிக அடைப்பில் தளர்வு, மாநில வருமானத்திற்கு மதுவிற்பனை அடைப்பில் தளர்வு. மக்கள் தரும் சரக்கு சேவைவரி, வருமானவரி சுங்கவரி எல்லாம் எதற்காம்? 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்கவென நாடு முழுவதும் முதலகட்ட ஊரடங்கு 21 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த உத்தரவு தமிழ்ப் புத்தாண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 40 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. எனினும், கொரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், மீண்டும் 3வது முறையாக ஊரடங்கு 2 கிழமைகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. அது மிகச்சிறந்த முயற்சியாகப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை தொடங்கலாம் என்று நடுவண் அரசு அறிவித்தது. மக்கள் தரும் சரக்கு சேவைவரி, வருமானவரி சுங்கவரி எல்லாம் எதற்காம் கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. குடியர்கள் குடியைகள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். குடியர்களுக்கு இணையாக குடியைகளும் போட்டி போட்டு நீண்ட வரிசையில் முகமூடிகளை அணிந்தபடி, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி, மதுபானங்களை வாங்கி சென்றதைக் காண முடிந்தது. அங்கு முந்தாநாள் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்றும் விற்பனை சூடு பிடித்தது. இதுபற்றி கலால் துறை உயரதிகாரிகள் கூறும்பொழுது, ‘இந்தியாவில் தயாரான மதுபானம் 36.37 லட்சம் லிட்டர் அளவில் 4.21 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதனால் ரூ.182 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இதேபோன்று 7.02 லட்சம் லிட்டர் அளவிலான பீர் 90 ஆயிரம் பெட்டிகள் வரை விற்று தீர்ந்துள்ளன. இதனால் ரூ.15 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்து உள்ளது’ என தெரிவித்து உள்ளனர். இதனால் கர்நாடகாவில் குடியர்களும்- குடியைகளும், ஊரடங்கு தளர்வின் 2வது நாளில் ரூ.197 கோடி அளவுக்கு மதுபானம் வாங்கிச் சென்றுள்ளனர். நாடும், பண்பாடும் வெளங்கிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



