Show all

எச்.இராஜா! நானும் என் கூட்டாத்தாரும் மட்டுமே பேச வேண்டும். தமிழர்கள் படிக்கவும் பகிரவும் வேண்டும் என்கிறார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா- சாத்தான்குளம் நிகழ்விற்கு காரணமான காவல்துறையினரின் (கொடூரத்திற்கு) எதிராக போராடி வரும் வணிகர் சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் நிகழ்விற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நிகழ்வு தொடர்பாக நேற்று பாதிக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நியாயம் வழங்குக என்ற முழக்கம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி இருந்தது. 

சென்னை அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கை  தாமாக முன்னெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சாத்தான்குளம் நிகழ்வைக் கண்டித்து கீச்சுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “காவல்துறையின் மிருகத்தனம் கொடூரமான குற்றம், பாதுகாவலர்களே அடக்குமுறையாளர்களாவது துயர்மிகுந்தது" என தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என துடுப்பாட்ட வீரர் சிகர் தவான் தனது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“காவலர்களே கொலை செய்தால் யாரை அழைப்பது" என இசையமைப்பாளர் யுவன்சங்கர் இராஜா பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித், “பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா? என எழுதியுள்ளார்.

இப்படியான சூழலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, காவல்துறையினரின் (கொடூரத்திற்கு) எதிராக போராடி வரும் வணிகர் சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள முகநூல் பதிவில், சாத்தான்குளத்தில் காவல்துறைக்; காவலில் நடந்த இறப்பு நான்கு காவலர்கள் தொடர்புடைய செயல் என்றும், ஒரு காவல் நிலையத்தில் 4 பேர் செய்த குற்றத்திற்கு காவல்துறை முழுவதையும் கண்டனத்திற்கு உள்ளாக்குவது முறையல்ல. எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், சீனக் கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காவல்துறை அரும் பணியாற்றி வருகிறது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் என்கிறார்.

நான்கு பேரின் குற்றத்தை ஒட்டுமொத்தக் காவல்துறை மீது சுமத்தக் கூடாது என்று தெரிவிக்கிற அதே எச்.இராஜா-  காவல்துறைக்கு எதிரான எந்தவித போராட்டமும் வெகுஜன விரோத போராட்டமாகவே கருதப்படும் என்கிறார். எவ்வளவு முரண்பாடு.

சரி இந்த உங்களின் முரண்பாட்டு மூடத்தனத்தை உங்களுக்கு மட்டுமானது என்று கருதுவதா? இல்லை ஒட்டு மொத்த பாஜகவே இப்படித்தான் என்று கருதுவதா? தனித்தனியாக நீங்கள் சொல்லுவது போலத்தான் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் நேர்கோட்டில் சிந்திக்கவே கூடாது என்று நீங்கள் கருதுவதாக அல்லவா தெரிகிறது.
 
மேலும் எச்.இராஜா தெரிவிக்கும் போது, “இந்நிகழ்வை அமெரிக்க ப்ளாயிட் நிகழ்வுடன் ஒப்பிட்டு சிலர் பேசுவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசவிரோத சீனக் கூலிகள் சீனாவின் செம்புக்கு இங்கு மார்க்கெட் உருவாக்க ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்ச்சில் மணியடித்து கலவரம் செய்ததை மறந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்கிறார்.

“இந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது நியாய விசாரணையின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதை வாய்ப்பாகப் பயன் படுத்தி நாட்டை சில தீய சக்திகள் கலவர பூமியாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுபற்றி பேசுவோம். படிப்போம். பகிர்வோம்.” என குறிப்பிட்டுள்ளார். 

நீங்கள் மட்டும் பேசுவீர்கள். நாங்கள் படிக்க வேண்டும் பகிர வேண்டும் அப்படித்தானே எச்.இராஜா. அதுதானே இந்தத் தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. பாவாணரும், பாரதிதாசனாரும், பெரியாரும் தொடக்கால திமுகவும் தாமே அந்த நடையை மாற்றி தமிழர்களைச் சிந்திக்க வைத்தார்கள். அதனால்தானே தமிழர்கள் உம்மையும் உம் கூட்டத்தாரையும் நோட்டாவிற்கு கீழே மதிக்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.