போராட்டக் களத்தில், தொடரும் உழவர்கள் தற்கொலை- தொடர்ந்து கருப்பு வேளாண் சட்டங்களுக்காக முரண்டு பிடிக்கும் பாஜகஅரசு- செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்திய மக்கள்- இந்தியாவின் நடப்புக்காட்சி இதுவாக இருக்கிறது. 18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி- காசியாப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உழவர்களில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உழவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 38 நாளை எட்டிய நிலையில் இதுவரை 6 கட்டங்களாக கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒன்றிய பாஜக அரசு அந்த வேளாண் சட்டங்கள் குறித்த பாடத்தையே தொடர்ந்து எடுத்து வருகிறது இலட்சக்கணக்கான உழவர்கள் டெல்லி எல்லையில் போராடி வருகிறார்கள். ஒன்றிய பாஜக அரசு அந்த வேளாண் சட்டங்கள் குறித்த பாடத்தையே தொடர்ந்து எடுத்து வருகிறதே? மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லையே என்கிற விரக்தியில் இதுவரை 6 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். நேற்று டெல்லி- காசியாபூர் எல்லையில் போராட்டக் களத்தில் இருந்த உழவர் காஷ்மீர் சிங். இவர் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர். இவர் போராட்ட களத்தில் உள்ள நடமாடும் கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. கழிப்பறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததை அடுத்து உழவர்கள் பதற்றமடைந்தனர். பின்னர் காவலர்களை அழைத்து கதவு உடைக்கப்பட்டது. அப்போது நைலான் கயிற்றில் அந்த உழவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. அவரது சட்டைப்பையில், எனது இறப்பு வீணாக செல்லக் கூடாது. எனது உடலை டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையில்தான் புதைக்க வேண்டும் என உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி போராடும் உழவர்களை நாளை மறுநாள் கலந்து கொள்ளுமாறு மீண்டும் அழைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு கலந்துரையாடல் என்ற தலைப்பில் அதுநடத்தும் கருப்பு வேளாண் சட்டங்கள் குறித்த பாடப்பயிற்சிக்கு. உழவர்கள் தொடர் தற்கொலையால் அந்த பகுதியே சோக மயமாக காட்சியளிக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.