Show all

தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கு, அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணை

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவருக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கை 5 அறங்கூற்றுவர்கள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை உச்ச அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்கத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு மேலவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனஅறிக்கை கொடுத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி கவனஅறிக்கையை வெங்கையா நாயுடு ஏற்கமறுத்தார். 

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச அறங்கூற்றுமன்றத்தில், நேற்று வழக்கு தொடர்ந்தது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதாப் சிங் பஜ்வா, அமீ ஹர்ஷத்ரே யாஜ்னிக் ஆகியோர் சார்பில், கட்சியின் மூத்த தலைவரும், சட்ட வல்லுநருமான கபில் சிபல் இந்த வழக்கை பதிகை செய்தார். உச்ச அறங்கூற்றுவர்கள் செல்லமேஸ்வர், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கை பதிகை செய்த கபில்சிபல், இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கபில்சிபலுடன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் அணியமாகி இருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. அறங்கூற்றுவர் ஏ.கே.சிக்ரி, தலைமையிலான இந்த அமர்வில் உச்ச அறங்கூற்றுவர்கள் எஸ்.ஏ.பாப்டே என்.வி.ரமணா, அருண்மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

அரசியல் சாசன அமர்வு அம்பேத்கார் வகுத்து கொடுத்த சட்ட அடிப்படையில் வழக்கை பரிசீலனை செய்யும் என்பதால், ஆளும் கட்சி அல்லாதவர்கள் அதில் நியாயம் கிடைக்கும் என்று நம்புவர்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,781.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.