Show all

போராடும் உழவர்கள் தெளிவோ தெளிவு! போராட்டத்தை முறியடிக்கும் திட்டமுயற்சியை அக்குவேறு ஆணிவேறாக விளக்குகிறார்கள்

டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களாக உயிரிழப்புச் சோகங்களைத் தாங்கிக் கொண்டு, பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகளுக்குப்- பாட்டாளி உழவர்களைக் கொத்தடிமைகளாக்கும்- ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை- முடக்காமல் வீடுதிரும்போம் என்று- உறுதியாய் இருப்பது வியப்பிற்கும்; பாராட்டிற்கும் உரியதாகும். பொங்கல் திருநாளில் அவர்கள் போராட்ட களத்தில் இருப்பது வருத்தமானது என்ற போதும், அவர்கள் வாகைசூடி வீடு திரும்ப நமது பொங்கல் வாழ்த்துக்கள்.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகளுக்குப்- பாட்டாளி உழவர்களைக் கொத்தடிமைகளாக்கும்- ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைகளில் உழவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொணர்ந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் முழுமையாக தடை விதிக்க அறங்கூற்றுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதேபோல், யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமும் எங்களுக்கு இல்லை. அறங்கூற்றுமன்றம் ஒரு குழு அமைத்து இந்தச் சட்டங்கள் குறித்து தெளிவாக விசாரிக்கும். அனைத்துக் கட்ட விசாரணைகளையும் முடித்த பின்னர் 2 மாதத்தில் இந்த குழுவானது அறங்கூற்றுமன்றத்தில் அறிக்கை பதிகை செய்யும். அதனை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை அறங்கூற்றுமன்றம் அதனை கண்காணித்து கொண்டிருக்கும். தற்போது இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த தற்காலிக தடை விதிக்கிறோம் என்றது அறங்கூற்றுமன்றம். 

இந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவை உச்ச அறங்கூற்றுமன்றம் அமைக்கிறது. அக்குழுவில், வேளாண் பொருளாதார நிபுணராகச் சொல்லப்படுகிற அசோக் குலாட்டி தலைமையில், பாரதிய கிசான் சங்க தலைவர் புபேந்தர் சிங் மன், சிவ்கெரி சங்கிதான் அமைப்பை சேர்ந்த அனில் தன்வாட் மற்றும் பன்னாட்டு வேளாண் கொள்கையின் தலைவர் பிரமோத் குமார் ஜோசி ஆகியோர் இடம் பெறுவார்கள்.

அறங்கூற்றுமன்றத்தால் உருவாக்கப்பட்ட குழுவை வேளாண் சங்கங்கள் ஏற்க மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எங்களால் முடிந்த வரையில் இந்தப் பாட்டில் சிக்கல்களைத் தீர்க்கவே முயற்சி செய்து வருகிறோம். இந்தக் குழுவை ஏற்க மாட்டோம் என கூறும் உழவர்கள் போராட்டம் நடத்தலாம். குழுவை மதிப்பவர்கள், அதனிடம் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து எல்லையில் போராட்டத்தை முன்;னெடுத்து வரும் உழவர் அமைப்புகள், ‘உச்சஅறங்கூற்றுமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்கவில்லை என்றும், மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கம் செய்யும்வரை தங்கள் போராட்டம் தொடரும்’ என்றும் அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

‘உச்சஅறங்கூற்றுமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவின் முன்பும் நாங்கள் அணியமாக மாட்டோம், எங்கள் போராட்டம் வழக்கம் போலத் தொடரும். உச்சஅறங்கூற்றுமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள், மேலும் அவர்கள் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி பல்வேறு கட்டுரைகளையும் எழுதி வருகிறார்கள். இதுபோன்ற குழுவை அமைப்பது, கவனத்தைத் திசைதிருப்பும் செயலாகும்’ என்று பாரதிய கிசான் சங்கத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறினார்.

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பின்னால் ஒன்றிய அரசு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வேளாண் சங்கத்தினர், திட்டமிட்டபடி குடியரசு நாளன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். உழவர்கள் குடியரசு நாளையும் கடைபிடிப்பார்கள். ஆனால் இது குறித்தும் அறங்கூற்றுமன்றத்தை தவறாக வழிநடத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. எங்களின் முந்தைய அறிவிப்புப்படி தெரிவிக்கப்பட்ட அனைத்துப் போராட்ட வகைகளும் தொடரும் என்றார்கள். 

உழவர்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொள்ளவே விரும்புகிறோம், உச்சஅறங்கூற்றுமன்றத்துடன் அல்ல என்று வேளாண் சட்ட கூட்டமைப்பு தெளிவோ தெளிவாக தெரிவிக்கிறது.

50 நாட்களாக கடும் பனி, மழை, வெள்ளம் அனைத்தையும் எதிர்கொண்டு கட்டுக்கோப்புடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் உழவர்கள், இதுவரை போராட்டக்களத்தில் 70க்கும் மேற்பட்ட உழவர்கள் உயிரிழந்துள்ளனர். 

கலந்துரையாடல் என்ற தலைப்பில், ஒன்றிய பாஜக தரப்பினர், வேளாண் சட்டங்களில் உழவர்களுக்கு நன்மை இருப்தாக தெரிவிக்கிற நயவஞ்சகத்தை வேளாண் சங்கங்கள் தெளிவாகப் புரிந்திருக்கிற நிலையில் கலந்துரையாடல் நாடகங்கள் தோல்வியிலேயே முடிந்தன. 

வரும் இந்தியக் குடியரசு நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், உழவர்கள் நாடுதழுவிய ட்ராக்டர் பேரணியையும் திட்டமிட்டுள்ளனர், அதனால் குடியரசு நாள் விழாவிற்கு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது ஒன்றிய பாஜக அரசு. உழவர்களின் ஒற்றை கோரிக்கை மூன்று சட்டங்களையும் நீக்கம் செய்யவேண்டும் என்பது மட்டுமே. ஆனால் பாஜக அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை. எனவேதான் உச்சஅறங்கூற்றுமன்றம் இந்த சிக்கலில் தலையிடுகிறது.

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் இந்த உத்தரவு மூலமாக உழவர்களை டெல்லியை விட்டு அப்புறப்படுத்துவதே நோக்கம், அதன்பின்னர் சில மாதங்களுக்கு பிறகு இந்த நான்குபேர் கொண்ட குழு, வேளாண் சட்டத்துக்கு ஆதரவாக அறிக்கை அளிக்கும். அதன்பிறகு உச்சஅறங்கூற்றுமன்றம் வேளாண் சட்டங்களுக்குத் தற்போது, இடைக்கால தடை என்று அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பினை ரத்து செய்யும். 

அதற்குப்பிறகு மீண்டும் போராடினால், இதுபோல எழுச்சியான போராட்டத்தை ஒன்றிய பாஜக அரசு நடத்தவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியும் இதுதான் ஒன்றிய பாஜக அரசின் திட்டம். அதற்குச் சாதகமாகவே உச்சஅறங்கூற்றுமன்றத்தின் இந்த உத்தரவு உள்ளது. 

ஒன்றிய பாஜக அரசும், வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களும், இந்தத் தீர்ப்பினை வானளாவ ஆதரிப்பதை பார்த்தாலே இந்த உண்மை புரியவில்லையா? என்கின்றனர் வேளாண் சங்கத்தலைவர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.