08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கு தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை. முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கடந்த 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5093 ல் (21.05.1991) சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் குடிஅரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்திய அடிப்படையில், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் 'ரிட்' மனு பதிகை செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச அறங்கூற்றுமன்றம் ஏழு பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் நளினி ஒரு மனு பதிகை செய்தார். இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு நடுவண் அரசின் ஒப்புதல் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு நடுவண் அரசு பதில் தரவில்லை. இதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே பதிகை செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து நடுவண் அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119ல் (23.01.2018) உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு நடுவண் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. நடுவண் அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளின் கொடூர சதித்திட்டம் மூலம் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியுடன் அந்தச் சம்பவத்தில் 9 காவலர்களும் கொல்லப்பட்டனர் குற்றவாளிகள் 7 பேரில் 4 பேர் வெளிநாட்டவர்கள் என்பதால் விடுதலை முடிவு அபாயகரமான முன்னுதாரணமாகிவிடும் என ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு நடுவண் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே, கடந்த இருபத்தி நான்கு ஆண்டு காலமாக காலத்திற்கு காலம் ஆள்மாற்றம், நிருவாக மாற்றம் காரணமாக கருத்துப் பரிமாற்ற இடைவெளி காரணமாகவும், மனித உரிமை குறித்த சிந்தனையுள்ள நிருவாகத் தளம் அமையாத நிலையிலும், ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கம் எத்தகையது என்று தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்துகிறது. அதில் மக்கள் தளத்தில் இருந்து அறுபது விழுக்காட்டு பேர்கள் ஏற்புடையதல்ல என்றே பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த மனப்போக்கு உள்ளவர்கள் அதிகாரத்தில் ஒற்றை விழுக்காடு அளவில் கூட இன்னும் இடம் பெற்றவில்லை என்கிற போது, மக்களிடம் வெறுமனே விழிப்புணர்ச்சி இருந்து பயன் இல்லை; அந்த விழி;ப்புணர்ச்சி இருப்பவர்கள் அதிகாரத் தளத்திற்கு வரவேண்டும்;. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,826.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



