Show all

அறங்கூற்றுமன்றம்! ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள்- உழவர் பெருமக்களின் ஒருமண்டலத்தை எட்டும் போராட்டம்- சட்டத்திற்கு எதிரான வழக்குகள்-

ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள்- உழவர் பெருமக்களின் ஒரு மண்டலத்தை எட்டும் போராட்டம்- மற்றும் ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள்- இதில் உச்ச அறங்கூற்றுமன்றத்தின் நிலை- ஓர்அலசல்

26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம்.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, உச்சஅறங்கூற்று மன்றத்தில் பல மனுக்கள் பதிகை செய்யப்பட்டுள்ளன. இது மறுபக்கம்.

இந்த நிலையில் இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உரிய, ஒன்றிய பாஜக அரசு, என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் பாப்டே கூறியதாவது: 

உழவர்கள் போராட்டத்தை அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது. நிலைமை மோசமாக உள்ளது. என்ன மாதிரியான கலந்துரையாடல் நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. வேளாண் சட்டங்களை சில காலங்களுக்கு நிறுத்தி வைக்க முடியுமா? போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தற்கொலை செய்துள்ளனர். முதியவர்கள், பெண்களும், போராட்டக் களத்தில் உள்ளனர். என்ன நடக்கிறது. வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனு கூட பதிகை செய்யப்படவில்லை.

இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். உழவர்கள் போராட்டத்தை தொடரலாம். போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. யாரின் கைகளிலும் குருதிக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டத்தை நிறுத்திவைக்க ஒன்றிய அரசு விரும்பாவிட்டால், நாங்கள், சட்டத்தை நிறுத்தி வைப்போம்.

வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று ஒன்றிய அரசு நினைப்பது ஏன் என தெரியவில்லை. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசு தயாராக இருந்தால், உழவர்களுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு எந்தவிதமான ஆக்கப்பாடான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தற்போதைய சிக்கலுக்கு ஒன்றிய அரசு தான் பொறுப்பு. சட்டத்தை நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள். இதனை நீங்கள் சிறந்த முறையில் செய்திருக்கலாம் .இவ்வாறு தலைமை அறங்கூற்றுவர் பாப்டே தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் தலைமை வழக்;கறிஞர் வேணுகோபால் கூறுகையில், ஒன்றிய அரசின் சட்டத்திற்கு அறங்கூற்றுமன்றங்கள் தடை விதிக்க முடியாது என, முந்தைய காலங்களில் உச்சஅறங்கூற்றமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வடிவங்கள் முழுமை பெறாமலும், அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இருக்கும் சட்டங்களை தான் அறங்கூற்றுமன்றங்கள் தடை விதிக்க முடியும். இல்லாவிட்டால், சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. குடிஅரசு நாளன்று அரசு விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், டிராக்டர் பேரணி நடத்த உழவர் சங்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளனர் என்று என்று தனக்கான வாய்ப்பின் போது தெரிவித்தார்.

வேளாண் சங்கங்கள் சார்பில் அணியமான துஷ்யந்த் தவே கூறுகையில், ராம்லீலா திடலுக்குச் செல்ல எங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். எந்த வன்முறையிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. வேளாண் சட்டங்களை, விவாதிக்க ஒன்றிய பாஜக அரசு பாராளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கலாம். ஆனால், அரசு ஏன் பயந்து பின்வாங்குகிறது என்று கேள்வி எழுப்பினார்.

நிறைவாக தலைமை அறங்கூற்றுவர் கூறுகையில், இந்தச் சிக்கலை ஒன்றிய அரசு சரியாக கையாளவில்லை. நாங்கள் சில நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தப் பாட்டை ஒன்றிய அரசு சரியாக கையாள்கிறது என நாங்கள் நினைக்கவில்லை. இது தலையாயத்துவமானது என்பதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. போராட்டத்திற்கு எதிராக நாங்கள் எதையும் சொல்ல விரும்பவில்லை. போராட்டம் தொடரட்டும். ஆனால், அதற்கு யார் பொறுப்பேற்று கொள்ள போகிறார்கள்? கலந்துரையாடல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.