Show all

நாளை தொடங்குகிறது பொங்கல் திருவிழா! பொங்கல் கொண்டாட்ட ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன

இந்த முறை பொங்கல் திருவிழா விடுமுறையோடு- ஞாயிறு விடுமுறையும் இணைந்து வருவது, சென்னைக்கு வந்து பணியாற்றும் தமிழக மக்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சி தருவதாகும். 

28,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை மாசு போக்கி காப்புக்கட்டும் திருநாள். பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் இந்த முதல்நாள்- சில ஆயிரம் ஆண்டுகளாக, தமிழர் தொன்மங்கள், வரலாறுகளை நெருப்பிலிடும் விழாவாக போகித் திருவிழா என்று மடைமாற்றப் பட்டிருந்தது. நாளை உங்கள் நினைவுப் பொருட்களை தூசு தட்டி பாதுகாக்க முயலுங்கள் தமிழர்களே எதையும் நெருப்பூட்ட வேண்டாம். காப்புக்கட்டும் திருநாளே இது. 

இந்த முறை பொங்கல் திருவிழா விடுமுறையோடு- ஞாயிறு விடுமுறையும் இணைந்து வருவது, சென்னைக்கு வந்து பணியாற்றும் தமிழக மக்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சி தருவதாகும். 
 
பொங்கல் திருவிழா கொண்டாட்டத்திற்கு, சொந்த கிராமங்களுக்குச் செல்ல வசதியாக சென்னையில் மேலும் 310 மாநகரப் பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நேற்று தொடங்கி நாளை (புதன்கிழமை) வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 226 பேருந்துகள் புறப்பட்டு சென்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) 4 ஆயிரம் பேருந்துகளிலும், நாளை (புதன்கிழமை) 4 ஆயிரத்து 2 பேருந்துகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 228 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்து 993 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தச் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்காக வசதியாக நாளை வரை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மேலும் 310 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் கோயம்பேட்டுக்கு 116 பேருந்துகளும், தாம்பரத்திற்கு 114 பேருந்துகளும், பூந்தமல்லிக்கு 57 பேருந்துகளும், மாதவரத்துக்கு 16 பேருந்துகளும், கே.கே.நகருக்கு 7 பேருந்துகளும், இயக்கப்படுகின்றன. மேற்கண்ட தகவல் மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.