அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு ரூ.500, 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி நடுவண் அரசு அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 10ம் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். டிசம்பர் 30-ந் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி சந்திரகவுடு ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறும் போது, நடுவண் அரசு தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பலர் முதல் வகுப்பில் விமான டிக்கட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். அதனையும் கண்காணித்து வருகிறோம். நடுவண் அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 500, 1000 ரூபாய் கறுப்பு பணத்தை வைத்திருப்பது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது அதிக அளவில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



