உழைத்த பணத்திற்கு ஒரு சிக்கலும் இருக்காது, பறித்த பணத்தை பாதுகாக்க முடியாது என்று சொலவடை உண்டு. சின்னப்பையனால் சுமக்க முடியாத பனம்பழத்தை பறித்துக் கொண்டது பாஜக. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் பதவியை பகிர்ந்து கொள்வதில் தொடரும் சிக்கலைத் தீர்க்க, மூன்று துணை முதல்வர் தீர்வை வழங்கியிருக்கிறது கட்சி மேலிடம். 09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உழைத்த பணத்திற்கு ஒரு சிக்கலும் இருக்காது, பறித்த பணத்தை பாதுகாக்க முடியாது என்று சொலவடை உண்டு. சின்னப்பையனால் சுமக்க முடியாத பனம்பழத்தை பறித்துக் கொண்டது பாஜக. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறும் தருவாயில் பறித்த பனம்பழத்தை பகிர்ந்து கொள்வதில் யாருக்கு முதன்மை என்ற பங்குத் தகராறில் முதல்வர் எடியூரப்பாவுக்கு பல நெருக்கடிகள் தோன்றியுள்ளன. மூன்று துணை முதல்வர் பதவி வழங்கும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் எடியூரப்பா ஏமாற்றமடைந்துள்ளார். அவர் ஆதரவாளர்களோ கலக்கமடைந்துள்ளனர். மற்றொரு புறம் தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின் கதி என்னவாகும் என தெரியவில்லை. இதற்கிடையில் டில்லி சென்ற எடியூரப்பா பாஜக இந்தியத் தலைவர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார். அமைச்சர்களுக்கு பதவி கிடைத்தும் துறைகள் ஒதுக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு நேற்று துறைகள் ஒதுக்கப்படும் என முதல்வரே அறிவித்தார். ஆனால் முன்னாள் இந்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானதால் துறைகள் ஒதுக்குவதும் தாமதமாகியுள்ளது. இதற்கிடையில் கட்சியின் எதிர்காலத்தை கருதியும் முதல்வரின் தன்னிச்சை செயல்பாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாட்டும் வகையிலும் மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக மேலிடம் எடியூரப்பாவுக்கு கட்டளையிட்டுள்ளது. அதுவும் கட்சியின் இந்தியப் பொது செயலர் சந்தோஷ் கட்டாயத்தின் பேரில் மேலிடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதி வாரியாக, குருபர் ஒதுக்கீடாக அமைச்சர் ஈஸ்வரப்பர், தலித் ஒதுக்கீடாக அமைச்சர் கோவிந்த் கோர்ஜோல், ஒக்கலிகர் ஒதுக்கீடாக அமைச்சர் அஸ்வத் நாராயணா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும்படி டில்லியிலிருந்து தகவல் வந்துள்ளதாக பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதையறிந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து எந்த காரணத்துக்கும் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டாமென நெருக்கடி கொடுக்கின்றனர். துணை முதல்வர் பதவி உருவாக்கினால் சில மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியடையும் வாய்ப்புள்ளது என கட்சி இந்திய செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த அவர், முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ஆட்சி நடத்துங்கள். பிரச்னைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,256.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. ஆனால் ஆட்சி முழுமை பெறவில்லை. இம்மாதத்தில் 17 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையில் உமேஷ் கத்தி ரேணுகாச்சார்யா அங்காரா பாலசந்திர ஜார்கிஹோளி போப்பையா அரவிந்த லிம்பாவளி உட்பட 20 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதே முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



