கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும், அனல்காற்றும் மக்களைப் பாதிக்கக் கிளம்பிவிட்டன. 13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும், அனல்காற்றும் மக்களைப் பாதிக்கக் கிளம்பிவிட்டன. சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். காலை 11.30 முதல் பிற்பகல் 3.30 மணிவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டு உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்கள் மழை பெய்யும். கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில், அதிகபட்சமாக, 96.63 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அனல்காற்று தொடர்பாக வடமாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று ராஜஸ்தானில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. வட மாநிலங்கள் பலவற்றிலும் 40 டிகிரி செல்சியசை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதேநேரம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



