Show all

போராட்டக் களத்தில் கடுங்குளிர் பாதிப்பில் 22 உழவர்கள் உயிரிழப்புச் சோகம்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருபது நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 உழவர்கள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடிய உழவர்களில் கடுங்குளிர் பாதிப்பில் இதுவரை 22 பேர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.
 
குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகள் நலனுக்காக ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருபது நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 உழவர்கள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தைக் கண்டித்து  பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதிலும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது முதல்- பயணிகள் மற்றும் சரக்கு தொடர்வண்டிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அடுத்து உழவர்கள் தலைநகர் டெல்லியில் நுழையும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதற்காக மாநிலத்திற்குள் நுழையும் வழிகளில் தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், அங்கு நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தங்கியிருந்து பேராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாஜக அரசு சட்டத்தை திரும்பப் பெறும் நோக்கமின்றி பல்வேறு குறுக்கு வழிகளில் சாம பேத தான தண்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. 

போராடும் உழவர்கள் அதனினும் மேலாக, கருப்பு வேளாண் சட்டங்களை  முறியடிக்காமல் வீடு திரும்புவது இல்லை என்று உறுதியாக இருக்கின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்த விட்டு விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட, சட்டத்தை எதிர்த்து முறியடிப்பதே தங்கள் நோக்கம் என்று தெளிவாக இயங்குகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.