Show all

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்!

முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் திரையில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.

28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. அறுபத்தொன்பது அகவை நெல்லை சிவா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர கொண்டாடி. திரைப்படத்தின் மீதான காதலால் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகே பாண்டியராஜனின் ஆண் பாவம் படத்தில் நடித்தார். இதுவே அவரது முதல் படம்.

மகா பிரபு, வெற்றிக்கொடி கட்டு, கண்ணும் கண்ணும், சாமி, திருப்பாச்சி, அன்பே சிவம், கிரீடம், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 302-ல் கடவுள், படிக்காதவன், தோரணை, கந்தசாமி, தமிழ்ப் படம், கிரி, பாபநாசம், மிருதன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில படங்கள் இன்னும் வெளியாகவில்லை. சின்னத்திரை தொடர்களிலும் நெல்லை சிவா நடித்து வந்தார். விஜய் தொலைக்காட்சியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நெல்லைத் தமிழில் பேசுவதையே தனிப் பாணியாகக் கொண்டு நடித்த இவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்களின் அணியில் இணைந்து தனித் திறமையுடன் வலம் வந்தார்.

முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் திரையில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரான பணகுடியில் நடைபெற உள்ளது.

நெல்லை சிவா மறைவுக்கு திரையுலக பேரறிமுகங்கள், மற்றும் அவரின் கொண்டாடிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.