மாணாக்கர் ஆசிரியர் என்கிற சொற்களில், தமிழ்முன்னோர் பொருத்தியிருக்கிற பொருளின் வகையை, இதற்கு இணையாக, உலக முன்னோர்கள் முன்னெடுக்கிற சொற்களில் பொருத்தியிருக்கிற பொருளின் வகையோடு ஒப்பு நோக்கி, தமிழியலின் தெளிவை முழுமையை உறுதியைப் புரிந்து கொண்டு கொண்டாடும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126: எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறது தமிழ். மொழிக்கான இலக்கணத்தையும், வாழ்க்கைக்கான இலக்கணத்தையும் பொருள் இலக்கணம் என்கிறது தமிழ். தமிழ் சுட்டுகிற இந்தப் பொருள் என்பது, இயற்கையில் எல்லாவற்றுள்ளும் இருக்கிற பொருண்மை அல்லது இயம் அல்லது கோட்பாடு மற்றும் இயக்கம் என்பது ஆகும். தமிழ்முன்னோர் இயற்கை என்கிற சொல்லில் பொருத்தியிருக்கிற பொருளில், இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இயற்கை என்றால், இயல் + கை= இயலின் நீட்சி என்று பொருள். இயல் என்றால் இயம் என்கிற கோட்பாடும் இயக்கம் என்கிற நடைமுறையும் என்று பொருள். இயற்கையின் அனைத்தையும் கோட்பாடு நடைமுறை உள்ளவைகளின் நீட்சி என்கிறது தமிழ். இந்தப் பொருள் (கோட்பாடும் நடைமுறையும்) அனைத்திற்கும் ஒன்றானது அல்ல. அது தன்மை முன்னிலை படர்க்கை என்கிற மூன்று நிலைகளில் வேறுவேறாக இருக்கிறது. தன்மை நிலை பொருளை கொண்டாடுகிற தனிமனிதர்களும் இருக்கிறார்கள். இனக்குழுக்களும் உள்ளன. முன்னிலை நிலைப் பொருளைக் கொண்டாடுகிற தனி மனிதர்களும் இருக்கிறார்கள். இனக்குழுக்களும் உள்ளன. படர்க்கை நிலைப் பொருளைக் கொண்டாடுகிற தனிமனிதர்கள் இருக்கிறார்கள். படர்க்கை நிலைப் பொருளைக் கொண்டாடுகிற இனக்குழு தமிழினம் ஒன்று மட்டுமாக நிற்கிறது. இயற்கையை, இயற்கையின் ஒவ்வொன்றையும் தனக்கானதாக பாடாற்றும், நினைக்கும், பேசும், எழுதும் வகை பொருளை தன்மை நிலை வகைப் பொருள் என்று சுட்டலாம். இயற்கை, இயற்கையின் ஒவ்வொன்றும் உனக்கு மட்டுமானது அல்ல எனக்குமானது என்று பாடாற்றும், நினைக்கும், பேசும், எழுதும் வகை பொருளை முன்னிலை நிலை வகைப் பொருள் என்று சுட்டலாம். இயற்கை, இயற்கையின் ஒவ்வொன்றும் இயற்கையின் அனைவருக்கும், அனைத்திற்கும் ஆனது என்று பாடாற்றும், நினைக்கும், பேசும், எழுதும் வகை பொருளை படர்க்கை நிலை வகைப் பொருள் என்று சுட்டலாம். இந்த மூன்றனுள் தன்மைநிலைப் பொருள்கோளைப் பாகுபாட்டியல் என்றும், முன்னிலைநிலைப் பொருள்கோளை முரண்பாட்டியல் என்றும், படர்க்கைநிலைப் பொருள்கோளை வகைப்பாட்டியல் அல்லது பண்பாட்டியல் என்றும் நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். ஒரு குடும்பத்தில் இருக்கிற அப்பாவின் பொருள்கோளை, அடிப்படையில் பாகுபாட்டியில் பொருள்கோள் என்று நிறுவலாம். முரண்பாட்டியல் அப்பாக்களும் வகைப்பாட்டியல் அப்பாக்களும் உண்டுதான். ஒரு குடும்பத்தில் இருக்கிற பிள்ளையின் பொருள்கோளை, அடிப்படையில் முரண்பாட்டியல் பொருள்கோள் என்று நிறுவலாம். பாகுபாட்டியல் பிள்ளைகளும் வகைப்பாட்டியல் பிள்ளைகளும் உண்டுதான். ஒரு குடும்பத்தில் இருக்கிற அம்மாவின் பொருள்கோளை, அடிப்படையில் வகைப்பாட்டியல் பொருள்கோள் என்று நிறுவலாம். முரண்பாட்டியல் அம்மாக்களும் பாகுபாட்டியல் அம்மாக்களும் உண்டுதான். தமிழினத்தின் அடிப்படை பொருள்கோள் வகைப்பாட்டியல் மட்டுமாகவே பற்பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பிராமணிய இனத்தின், உலக மதங்களின், ஒன்றை முதலாளியை நிறுவும் முயற்சியில் போட்டிக் களத்தில் இருக்கிற கட்சிகளின் பொருள்கோள் பாகுபாட்டியல் ஆகும். மார்க்சியம், பிராமணியத்திற்கு எதிரான திராவிடம் ஆகியவற்றின் பொருள்கோள் முரண்பாட்டியல் ஆகும். பலநூறு பாகுபாட்டு அமைப்புகளையும், முரண்பாட்டு அமைப்புகளையும் தனிமனிதக் குழுக்கள் உருவாக்கி பாடாற்றியும் தமிழினத்தின் பொருள்கோளை வகைப்பாட்டு நிலையில் இருந்து மாற்ற இயலவில்லை. மாற்ற நினைத்தவர்கள் நடப்பு இந்தியாவில் இருக்கிற பல்வேறு மொழியினத்தை உருவாக்கிக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அட்டவணை எட்டில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் அனைத்து மொழியினங்களும் பிராமணிய பாகுபாட்டு மலைப்பில் தமிழில் இருந்து பிரிந்தவைகளே. தமழியல், வகைப்பாட்டியல் என்கிற நிலையில், இருமையை அடிப்படையாக கொண்டாடுகிற பாங்கு பெற்றது. உலகினரின் பாகுபாட்டியல் மற்றும் முரண்பாட்டியல் என்கிற இரண்டுமே ஒருமையை ஆதிக்கப்படுத்தும் நோக்கத்திற்கானவைகளே. மாணாக்கர் ஆசிரியர் என்கிற சொற்களில், தமிழ்முன்னோர் பொருத்தியிருக்கிற பொருளின் வகைக்கு வருவோம். மாணாக்கர் மாண்புகளை ஆக்கிக் கொள்வதற்கு தளமாக ஆசிரியர் குற்றம் இல்லாதவராக இருக்கிறார் என்பதாக மாணாக்கர் ஆசிரியர் என்கிற சொற்களில் ஒன்றையொன்று ஆதிக்கப்படுத்தாமல், இது சிறந்ததா அது சிறந்ததா என்கிற ஒப்பீடு இல்லாமல் பொருள் பொதிக்கப்பட்டுள்ளது. மாண்புகளை ஆக்கிக் கொள்கிறவர் மாணாக்கர். ஆசு + இரியர்= ஆசிரியர். ஆசு என்றால் குற்றம். இரியர் என்றால் இல்லாமல் இருப்பவர். குற்றத்திற்கான எதிர்ச்சொல் மாண்பு. ஆனால் ஆசிரியரை மாண்பாளராக கட்ட முயலவில்லை தமிழியல். கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்கிற சொலவடையைக் கொண்டாடுவது தமிழ். அதனால், ஆசிரியரை மாண்புக்குச் சொந்தக்காரராகக் காட்டமல், குற்றம் இல்லாதவராக காட்டுகிறது தமிழ். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதும் தமிழ்கொண்டாடும் சொலவடைதான். பேரளவு மாணவர்களை- மாண்பை ஆக்கிக்கொள்ள வரவேற்று குவிக்க, ஆசிரியர் குற்றம் பார்த்திடல் கூடாது என்கிற பொருளை ஆசிரியரில் பொதித்திருக்கின்றனர் தமிழ்முன்னோர். பிராமணியம், சிஷ்யன் குரு என்று இரண்டு நிலைகளுக்குமிடையில் ஏற்றதாழ்வு கற்பிக்கிறது. குருவிடம் கற்கிற கல்விக்கு அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் சிஷ்யன். என்று பாகுபாட்டு பொருள்கோளை முன்னெடுக்கிறது பிராமணியம். சிஷ்யனை ஒன்றுமற்ற சுழியமாகவும், குருவை எல்லாம் வல்லவராகவும் காட்ட முனையும் பாகுபாட்டைக் கல்வியில் கட்ட முனைகிறது சமஸ்கிருதம். இன்றைக்கும் கூட ஒன்றிய ஆட்சியில் இருக்கிற பிராமணிய அரசு, மருத்துவம் சார்ந்த மாண்புகளை ஆக்கிக்கொள்றேன் என்று வருகிறவரிடம், சில பல முன்தகுதிகளை தனியார் நிறுவனங்களிடம் கற்றுவர கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக நீட் என்கிற ஒரு ஆதிக்க அடாவடியை முன்தகுதி ஆக்குகிறது. எல்லா நுழைவுத் தேர்வுகளின் நோக்கமும் பாகுபாட்டுக் கட்டமைப்புக்கான ஆதிக்க அடாவடியே. குரு பெரிய ஆளெல்லாம் இல்லை அவர் கற்றுத்தருகிறவர்; டீச்சர். இவர் கற்றுக் கொள்கிறவர்; ஸ்டுடண்ட். என்று ஐரோப்பியம் முன்னெடுக்கிறது முரண்பாட்டுப் பொருள்கோளை. இந்தியா விடுதலை பெற்றபோது, தமிழ்நாட்டில் அமைந்த காங்கிரஸ் அரசும் ஒன்றிய அரசோடு பிராமணியமே பேணியிருந்தது கல்வியில். அடுத்து, இதுவரை அமைந்த அனைத்து தமிழ்நாடு அரசுகளும், குரு பெரிய ஆளெல்லாம் இல்லை அவர் கற்றுத்தருகிறவர்; டீச்சர். இவர் கற்றுக் கொள்கிறவர்; ஸ்டுடண்ட். என்று ஐரோப்பிய முரண்பாட்டுப் பொருள்கோளையே முன்னெடுத்து வருகிறது. இந்த ஐரோப்பியம் கொண்டாடும் போக்கில், ஆங்கில வழிக்கல்வியையும் வலிந்து சுமக்கிறது தமிழ்நாடு. தமிழியலின், இயல்கணக்கு கல்வியை மீட்டு நிறுவும் கடமை, தமிழ்ச்சான்றோர் முன்பாக மலையாக நின்று கொண்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,336.