Show all

இரண்டு மாணவிகள் கைது! சக மாணவிகளைக் கொன்று இரத்தம் குடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தைந்து  மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க திட்டமிட்ட 2 மாணவிகள் கைது. தமிழகத்திலோ, இந்தியாவிலோ அல்ல.

புளோரிடாவிலுள்ள பார்ட்டோவ்  நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என அவளது தாய்க்கு பள்ளியிலிருந்து செல்பேசியில் செய்தி வந்தது. உடனடியாக அவர் பள்ளியைத் தொடர்பு கொண்டு தனது மகள் பள்ளிக்கு வந்தார் என தெரிவிக்க பள்ளி ஊழியர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.
 
இதற்கிடையில் முந்தைய நாள் இரு மாணவிகள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த இன்னொரு மாணவி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்க, அது பற்றி விசாரிப்பதற்காக பள்ளிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவிகளைத் தேடிய பள்ளி ஊழியர்கள் அவர்கள் குளியல்அறையில் ஒளிந்திருப்பதைக் கண்டனர். காவல்துறையினர், சிறுமிகளை பிடித்து விசாரித்ததில்  11, 12 அகவையுடைய அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

தங்களை விட அகவையில் சிறிய 15 முதல் 25 மாணவிகளைக் கழுத்தை அறுத்துக் கொன்று அவர்கள் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்றும், பின்னர் அவர்களது உடல் பாகங்களை பள்ளி முன் வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

அவர்களது பைகளை சோதித்ததில் கத்திகள், கத்திரிக்கோல்கள், பீட்ஸா வெட்டும் கத்திகள் மற்றும் இரத்தத்தைக் குடிப்பதற்காக ஒரு ஒயின் கிளாஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்கள் வீடுகளை சோதனையிட்டதில், அவர்கள் குளியல் அறையில் கொல்ல வேண்டும் என்று எழுதி, படம் வரைந்து திட்டம் தீட்டிய அட்டைகளும், செல்பேசியில் கொலை செய்வது தொடர்பாக ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்ட குறுஞ்செய்திகளும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

அந்த சிறுமிகள் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.