பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள நோட்ரடாமில் 850 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற தேவாலயத்தில் பெரும் தீ விபத்து.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரான்சில் தேவாலயத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தினால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன.
தேவாலயத்தில் உள்ள ஏராளமான பழமைதன்மை மிக்க கலைப்பொருட்களை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தீ விபத்துக்கான காரணம் எதுவும் இன்னமும் தெளிவாக தெரியவில்லை.
'மிகவும் மோசமான இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என்கிறார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங். மேலும் புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்வதேச அளவில் நிதி திரட்டும் திட்டத்தை தொடங்க முயற்சி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேவாலய சுவரில் சில வெடிப்புகள் ஏற்பட்டதையொட்டி, அந்த கட்டடத்தின் அமைப்புக்கு சேதம் ஏற்படக்கூடும் என அச்சத்தில் சீரமைப்பு பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த சீரமைப்பு பணிகளின் காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்தத் தீ விபத்து, மிக குறுகிய நேரத்திலேயே தேவாலயத்தின் மேற்கூரையை சேதப்படுத்தியது.
மேலும், தேவாலயத்தில் இருந்த கண்ணாடிகளால் ஆன சாளரங்கள் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு அமைப்பு ஆகியவை இந்த தீ விபத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,124.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.