Show all

ஜான்சன் மற்றும் ஜான்சன் பூசுபொடி விற்பனை! உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் படவுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் டால்கம் பூசுபொடி விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுத்திய ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப் புகழ்பெற்ற ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்கான டால்கம் பூசுபொடி தயாரிப்பு மற்றும் விற்பனையை உலகம் முழுவதும் அடுத்தாண்டிலிருந்து நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் டால்கம் பூசுபொடியில் ஆஸ்பெஸ்டாஸ் இருப்பதாகவும் இதனால் தங்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்குகளை ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

உலகளாவிய மதிப்பீட்டின் ஒருபகுதியாக, குழந்தைகளுக்கான முற்றிலும் சோளமாவு அடிப்படையிலான பூசுபொடிக்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம், என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சோளமாவு அடிப்படையிலான குழந்தைகள் பூசுபொடி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதேவேளையில் தங்கள் நிறுவனத்தின் குழந்தைகள் பூசுபொடி பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது எனவும் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் டால்கம் பூசுபொடி விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் நிறுத்தியது. 

புவியிலிருந்து எடுக்கப்படும் டால்க் எனும் கனிமத்தால் டால்கம் பூசுபொடி தயாரிக்கப்படுகிறது. அதன் இயற்கையான வடிவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் எனும் பொருள் உள்ளது.

அந்நிறுவனத்தின் ஆவணங்கள், விசாரணை சாட்சியங்கள் மற்றும் மற்ற ஆதாரங்களின்படி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு முதல் 22 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் மூலப்பொருள் மற்றும் முற்றிலும் தயாரிக்கப்பட்ட பொடிகளில் சில சமயங்களில் சிறிதளவு ஆஸ்பெஸ்டாஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது குறித்த ஆதாரங்களுக்கு எதிர்வினையாக நீதமன்றங்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் அமெரிக்க வழக்குரைஞர்களுக்கு அந்நிறுவனம் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தது.

சுமார் 130 ஆண்டுகளாக ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பூசுபொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடும்பங்களுக்கு ஏற்றது என்ற பிம்பத்தின் அடையாளமாக அந்நிறுவனம் நெடுங்காலம் நிலைநின்றது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,344.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.