எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) கீச்சுவை முழுமையாக வாங்கியுள்ளார். தற்போது அவர் கீச்சுவின் முதன்மை ஊழியர்களைக் கத்தவிட்டுள்ள நிலையில், அவர் கைப்பற்றியுள்ள இந்த கீச்சுப்பறவையை கத்தவிடுவாரா? அமுக்கிப் பிடிப்பாரா! என்பது இணைய ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது. 12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: எலான் மஸ்க் கீச்சுத் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு கீச்சு நிறுவனத்தின் 9.2 விழுக்காட்டுப் பங்குகளை விலைக்கு வாங்கினார். அதையெடுத்து அவர் கீச்சு நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதில் இடம் பெற மறுத்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலே அவர் கீச்சு நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக அறிவித்தார். ஒரு பங்குக்கு 54.20 டாலர் விலை என்ற வீதத்தில் மொத்தமாக 44 பில்லியன் டாலர் தருவதாக அவர் கூறினார். கீச்சு ஊழியர்கள் நடுவே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், கீச்சு இயக்குநர் குழு நிறுவனத்தை எலான் மஸ்குக்கு விற்க ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான பரிவர்த்தனை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில், கீச்சு நிறுவனம் சில தகவல்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்தப்பாடு அறங்கூற்றுமன்றம் சென்றது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்க எலான் மஸ்குக்குக் அமெரிக்க அறங்கூற்றுமன்றம் கெடுவிதித்தது. இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) கீச்சுவை முழுமையாக வாங்கியுள்ளார். கீச்சு நிறுவனத்தை வாங்கியதற்கான காரணத்தை எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். 'தற்போது சமூக வலைதளங்களில் வலதுசாரிகளும் இடதுசாரிகளும் வெறுப்பை வளர்த்து வருகின்றனர். சமூக வலைதள நிறுவனங்களும் இந்த வெறுப்புப் போக்கை ஊக்குவிக்கின்றன. அதன் மூலம்தான் பணம் வருவதாக அந்நிறுவனங்கள் நம்புகின்றன. இதன் காரணமாக இணக்கமான உரையாடலுக்கான தளம் இல்லாமல் போகிறது. எதிர்கால மரபினர் வன்முறை இல்லாத இணக்கமான உரையாடலை நிகழ்த்த ஒரு தளம் கட்டாயம் என்பதை நான் உணர்ந்தேன். அதற்காகவே கீச்சுவை வாங்கியுள்ளேன். நான் வருமானம் ஈட்டுவதற்காக கீச்சுவை வாங்கவில்லை. மனிதத்துக்கு உதவவே அதை வாங்கியுள்ளேன்' என்று தெரிவித்தார். கீச்சுவை வாங்கியதைத் தொடர்ந்து எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கீச்சுவின் தலைவர் பராக் அகர்வாலை பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளார். மேலும், கீச்சுவின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார். பராக்அகர்வால் பொறுப்புக்கு வந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி அவருக்கு 42 மில்லியன் டாலர் (ரூ.350 கோடி) இழப்பீடாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,416.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.