Show all

பிரிட்டன் தலைமைஅமைச்சர் ரிசிசுனக்கிற்கு அபராதம் விதித்த காவல்துறை! பயணத்தின் போது காரில் இருக்கைப்பட்டை அணியாததால்

பிரிட்டனில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் காரில் இருக்கைப்பட்டை அணிவது கட்டாயம். அப்படியிருக்க தலைமைஅமைச்சரே சட்ட விதிகளை மீறி இருக்கைப்பட்டை அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார்கள் குவிய, கார் பயணத்தின்போது இருக்கைப்பட்டை அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

07,தை,தமிழ்த்தொடராண்டு-5124: காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே காணொளியொன்றை சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார் பிரிட்டன் பிரதமர் ரிசிசுனக். காணொளிக் காட்சியில் அவர் காரில் இருக்கைப்பட்டை அணியாதது தெரியவந்தது. 

பிரிட்டனில் மருத்துவ காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் காரில் இருக்கைப்பட்டை அணிவது கட்டாயம். அப்படியிருக்க தலைமைஅமைச்சரே சட்ட விதிகளை மீறி இருக்கைப்பட்டை அணியாமல் பயணம் செய்கிறார் என்ற புகார்கள் குவிந்தன. கார் பயணத்தின்போது இருக்கைப்பட்டை அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு தவறு என்பதை முழுமையாக ரிசிசுனக் ஏற்றுக் கொண்டதாகவும், மறதியில் சிறிது தூரம் இருக்கைப்பட்டை அணியவில்லை என தனது செயலுக்கு அவர் பொறுத்துக்கொள்ள கேட்டுக் கொண்டார் என்றும் தலைமைஅமைச்சர் இல்லம் தெரிவித்துள்ளது. மேலும் அபராதத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

வடக்கு பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்தக் காணொளி படமாக்கப்பட்டது. அப்போது தலைமைஅமைச்சர் லன்காசயரில் இருந்தார்.

இந்தக் காணொளி, அரசாங்கத்தின் அண்மைத்துவ மேம்படுத்துதல் செலவினம் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக, ரிசிசுனக்கின் படவரி பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தலைமைஅமைச்சர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், கோவிட் ஊடரங்கு விதிகளை மீறியதற்காக போரிஸ் ஜான்சன், அவருடைய மனைவி கேரி ஜான்சன் ஆகியோருடன் சேர்த்து ரிசிசுனக்கிற்கும், அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிக்கப்பட்டதை யாரேனும் எதிர்க்க முடிவு செய்தால், காவல்துறையினர் வழக்கை மறுபரிசீலனை செய்து, அபராதத்தைத் திரும்பப் பெறுவதா அல்லது அறங்கூற்றுமன்றத்திற்கு எடுத்துச் செல்வதா என்பதை முடிவு செய்வார்கள்.

தொழிலாளர் கட்சியின் துனைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர் ஒரு கீச்சில் ரிசிசுனக் தான் இதற்கு 'முழுமையாகப் பொறுப்பு' எனக் கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சியின் செய்தித் தொடர்பாளர், 'ரிசிசுனக்கின் காணொளி, அவருக்கே எதிராக மாறி அவரை நகைப்புக்குரியவராக மாற்றியுள்ளது,' எனக் கூறினார்.

தாராளவாத ஜனநாயக கட்சியினர், காவல்துறையின் அபராதம் விதிக்கப்பட்ட இரண்டாவது தலைமைஅமைச்சரான அவர், 'போரிஸ் ஜான்சனைப் போலவே விதிகளைப் புறக்கணித்துள்ளார்,' என்று கூறினர்.

லிப் டெம் துணைத் தலைவர் டெய்சி கூப்பர், 'பார்ட்டிகேட் முதல் சீட் பெல்ட் கேட் வரை, இந்த கன்சர்வேடிவ் அரசியல்வாதிகள் பிரிட்டிஷ் மக்களை முட்டாள்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு விதி, மற்றவர்களுக்கு மற்றொரு விதி என்பதைப் போல அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டாலும், இந்த அபராதம் பழைமைவாதிகள் இறுதியில் அதற்கான எதிர்வினையைப் பெறுவார்கள் என்பதை நினைவூட்டுகிறது,' எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிளாக்பூல் சவுத் பகுதியின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் பென்டன் ரிசிசுனக்கை ஆதரித்து, 'அனைவரும் தவறு செய்வதுண்டு,' என்று கூறியுள்ளார்.

'நம் சமூகங்களில் நடக்கும் கடுமையான குற்றங்களைக் கையாள்வதில்' காவல்துறையினர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய பென்டன், 'இதை இங்கே விழுக்காட்டில் வைத்துக்கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பிரிட்டன் மக்கள் இதேபோன்ற நிலையான அபராத அறிவிப்புகளைப் பெறுகிறார்கள்,' எனத் தெரிவித்தார்.

கார், வேன், மற்றும் பிற சரக்கு வாகனங்களில் இருக்கைப்பட்டை பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், 14 அகவை மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் இருக்கைப்பட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும். 14 அகவைக்குட்பட்ட பயணிகள் இருக்கைப்பட்டை அணிந்திருப்பதை உறுதி செய்யவேண்டியது ஓட்டுநர்களின் பொறுப்பு.

அதைச் செய்யாமல் இருக்க ஏதும் மருத்துவ காரணங்கள் இருந்தால், அதற்குரிய மருத்துவ சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, காவல்துறை, தீயணைப்பு அல்லது பிற மீட்பு சேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் இருப்பது போன்ற சூழல்களுக்கு இதில் விதிவிலக்குகள் உண்டு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,500.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.