Show all

காலனியாதிக்க மனோபாவம்! இங்கே முன்னெடுக்கப்பட்டதா? அங்கே தொடர்கிறதா?

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: 'ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை' என்பதாக. 

06,தை,தமிழ்த்தொடராண்டு-5124: இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வெடித்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குஜராத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியால், கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

கலவரம் நடந்த பிறகு நடத்தப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையிலும், நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக கடந்த ஆண்டு விசாரணை நடத்திய உச்ச அறங்கூற்றுமன்றம், குஜராத் கலவரத்தின்போது முதல்வராக இருந்த மோடி எந்த தவறும் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், குஜராத் கலவரத்தோடு மோடியை தொடர்பு படுத்தி பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. 'இந்தியா- மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயார் ஆகியுள்ளது. குறிப்பாக இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையின மக்களுக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பார்க்க வேண்டும். ஆயிரத்திற்கு மேலானவர்கள் பலியான குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி மீது எழுந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு எதிர்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வலையொளியில் வெளியான இந்த ஆவண படத்துக்கு ஒன்றிய பாஜக அரசு தடை விதித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியாக இருக்கிறது.

ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்தப்பாடு குறித்து கூறியதாவது: 'இந்தியாவுக்கு எதிரான கருத்துப்பரப்புதலை முன்னெடுக்கும் நோக்கத்தில் இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் இது உள்ளது. ஒரு தலைபட்சமான இந்த ஆவணப்படம் காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் நீடிப்பதை காட்டுகிறது. இது கண்ணியாமனது இல்லை' என்று எதிர்வினையாற்றியுள்ளார்.

இதனிடையே, இந்தப்பாடு தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் வம்சாவளி இம்ரான் குசைன் பிரிட்டன் தலைமைஅமைச்சர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரிஷி சுனக், 'குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது' என்;று விடையளித்துள்ளார் என்று தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,499.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.