Show all

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை நையப்புடைத்து பாடம் புகட்டிய நாகர்கோவில் இளைஞர்கள்

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சாலையில் செல்லும் போது இரு சக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை என்று இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வன்முறையாளர்களை அந்த வழியே சென்று கொண்டிருந்த இளைஞர்கள் பிடித்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பொதுஇடத்தில் ஏதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்தால் அதனை மக்கள் அச்சத்தோடு வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள், வேறு எதுவுமே செய்யமாட்டார்கள் என்பது தான் சமூக விரோத கும்பலுக்கு இன்று வரை இருக்கும் துணிச்ச்ல்.

அப்படி அச்சத்துடனேயே எப்போதும் இருக்க வேண்டாம் தேவைப்பட்டால் களத்தில் இறங்குவோம் என்பதை நிரூபித்துள்ளனர் நாகர்கோவில் இளைஞர்கள்.

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 3 சமூகவிரோதிகள் பயங்கர ஆயுதத்துடன் சென்றுள்ளனர். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் சக்கர வாகனத்திற்கு வழிவிடவில்லை என்று கூறி காரில் சென்ற ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ரத்தினம் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் புத்தாலத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். பைக்கிற்கு வழிவிடவில்லை என்று ஆபாச வார்த்தைகளில் திட்டியுள்ளனர் அந்த ரவுடிகள்.

இதனைத் தட்டிக் கேட்க சென்றவரை அரிவாளால் தாக்கியதோடு, மற்றொரு நபரையும் துரத்தி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளனர்.

ரவுடிகளின் இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பைத் தட்டிக் கேட்க சென்றவரிடம் அடாவடி செய்த ரவுடிகளின் செயல் அந்தப் பகுதி மக்களை வெகுண்டெழ வைத்துள்ளது.

இந்தச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் திரண்டு வந்து 3 ரவுடிகளையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். பொது இடத்தில் வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களை நையப்புடைத்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டினர்.

நாகர்கோவில் இளைஞர்களின் இந்த துணிச்சலான முயற்சி சமூக விரோத கும்பலுக்கு தகுந்த பதிலடியாக இருந்தது. மற்றவர்களின் உயிரையே பறித்தவர்கள் தங்கள் உயிருக்காக அடி தாங்காமல் கெஞ்சினர். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அவர்களைக் காவல்துறையினர் இழுத்து சென்றனர். நாகர்கோவிலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பொதுமக்களுக்கு கோபம் வந்தால் ஒரு ரவுடியும் நினைத்தபடி ஆட்டம் போட முடியாது என்பதை நிரூபித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,634

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.