22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். எச்.ராஜாவின் வன்முறை பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், ஐந்து ஆண்டுகளுக்க முன்பு நிறுவப்பட்ட லெனின் சிலையை ஜேசிபி எந்திரம் வைத்து பாஜகவினர் இன்று காலையில் அகற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த மாநில பாஜக செயலர் ராம் மாதவ் தனது கீச்சுப் பக்கத்தில், லெனின் சிலை அகற்றம் குறித்து புகைப்படத்துடன் கருத்தை பதிவிட்டு பின்னர் அதனை அகற்றி விட்டார். இந்நிலையில், தமிழக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது முகநூல் பதிவில், லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. திரிபுராவில் இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை என்றும் ராஜா குறிப்பிட்டுள்ளார். எச். ராஜாவின் இந்த ஆணவ மிரட்டல் பதிவுக்கு திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறிய பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். பெரியார்சிலை உடைக்கப்படும் என்ற எச்.ராஜா கருத்துக்கு முகநூலில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,718.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.