Show all

தேர்தல் விதிமுறை மீறல்: தினகரனுக்கான ஆப்பு தயாராகிறதா என்ன! மேலும் 19பேர் ஒப்புக்குச் சப்பானியா

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இராதாகிருட்டினன்;நகரில் வேட்புமனு பதிகையின் போது விதிமுறையை மீறியதாக தினகரன் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று தலையாய வேட்பாளர்கள் வேட்பு மனு பதிகை செய்ய நேரம் கேட்டிருந்தனர். தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை அளித்தார்.

இதேபோல் தினகரனும் வேட்புமனு பதிகை செய்ய நேரம் கேட்டிருந்தார். அவருக்கு நேற்று மதியம் 1 மணியளவில் வேட்புமனு பதிகை செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி தனது ஆதரவாளர்களுடன் வந்த தினகரன், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரன், வெற்றிவேல் வி.பி.கலைராஜன் உள்ளிட்ட 20 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் தேர்தல் உதவி அலுவலர் சுப்ரமணியன் புகார் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அளித்த புகாரில், தினகரன், வெற்றிவேல் உள்ளிட்ட 20 பேர் மீது விதிமுறையை மீறி அதிக வாகனங்களில் வந்து வேட்புமனு பதிகை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 மீட்டருக்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தவில்லை எனவும் புகார் கூறப்பட்டுள்ளது.

தினகரனுக்கான ஆப்பு தயாராகிறதா என்ன! மேலும் 19பேர் ஒப்புக்குச் சப்பானியா? என்று புலம்புகிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,624

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.