தமிழக முதல்வர்
தங்கும் சிறுதாவூர் பங்களாவில் கோடிக் கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது குறித்து
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இந்தியத்
தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக காவல் துறை தலைவர் ஆகியோருக்கு
வைகோ அனுப்பியுள்ள மனு: கடந்த 27 ஆம் தேதி
இரவு, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப்பெரிய
கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கண்டெய்னர் ஏற்றிய லாரி
கிராமத்துச் சாலையைக் கடந்து சென்றபொழுது, அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் லாரியின்
ஓட்டுநரிடம் கண்டெய்னரில் என்ன பொருள் கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு
நிலக்கரியும், விறகும் ஏற்றிச் செல்கிறோம் என்று பதில் தெரிவித்திருக்கின்றார்கள்.
ஆனால், நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.
1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு
அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என தெரிய வருகிறது. இதுதவிர, தார்பாலின்
உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் இன்று (28.03.2016 ) காலை சிறுதாவூர்
பங்களாவுக்குள் சென்றுள்ளன. லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் ஜெயலலிதாவின்
சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்
உறுதியாக நம்புகிறேன். மேலும் உறுதி செய்யப்படாத
தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள்
அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு,
மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே தாங்கள் உறுதியான
நடவடிக்கை மூலமாக சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம்
தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மீண்டும் வருவதற்கும், சுதந்திரமாகவும்
நேர்மையாகவும் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும்
வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.