28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மன்னார் பாலம் (ராமர்பாலம்) தொடர்பான நிலைப்பாட்டை 6 கிழமைகளில் தெரிவிக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு 5 கிழமைகள் முடிந்து விட்டன. தமிழகத்தின் பாம்பனுக்கும் ஈழத்தின் தலைமன்னாருக்கும் - உலகம் முழுவதும் திரைகடலோடி திரவியம் தேடும் கோட்பாடு கொண்டிருந்த பழந்தமிழர் தரைவழி வணிகத்திற்காக சுண்ணாம்புப் பாறைகளால் கட்டிய மன்னார் பாலம் - குலேத்துங்க சோழன் காலத்தில் கம்பரால் இராமயணம் எழுதவிக்கப் பட்டு, ஈழத்தை இழிவு படுத்த இராமனை தமிழனாக காட்டும் முயற்சியின் போது - ஆரிய இராவணன் அரக்கனாக்கப் பட்டான். மத்தியபிரதேசத்தில் இருந்த இலங்கை ஈழத்திற்கு மாற்றப் பட்டது. மன்னார் பாலம் இராமயணத்தில் சொல்லப் பட்ட வானரங்களால் கட்டப்பட்ட இராமர் சேதுவாக்கப் பட்டது. குமரிக் கடல் சேது சமுத்திரமாக்கப் பட்டது. மன்னார் பாலத்தை (இராமர் பாலம்) இயற்கையாக உருவானதாக சுட்டிக் காட்டும் காங்கிரசும், கூட்டணிக்; கட்சி திமுகவும், பாலத்தை இடிக்கும் திட்டத்திற்கு, ‘சேது (பாலம்) சமுத்திர திட்டம்’ என்றே பெயரிட்டிருப்பது வேடிக்கை. மன்னார் பாலத்தை (இராமர் பாலம்) இடிக்காமல் மாற்றுப் பாதையில் செயல்பட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நடுவண் அரசு தனது நிலைப்பாட்டை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தெளிவுபடுத்த வலியுறுத்தி, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சாமி மனு பதிகை செய்தார். இதையடுத்து, மன்னார் பால (இராமர் பாலம்) விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை 6 கிழமைகளில் நடுவண் அரசு பிரமாண பத்திரம் பதிகை செய்ய உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மன்னார் பாலம் (இராமர் பாலம்); மனிதர்களால் கட்டமைக்கப்பதே தவிர, இயற்கையாய் உருவானது அல்ல என்று அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருப்பதை பாஜக தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். மன்னார் பாலத்தை (இராமர் பாலம்) அகற்றி விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்ட போது நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. குறிப்பாக, பாஜக அந்தத் திட்டத்துக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. ஆனால், காங்கிரஸ், திமுக தரப்பினரோ அது ; இயற்கையாகவே உருவான மணல் திட்டுக்கள் என்று வாதிட்டு வருகின்றனர். தமிழ்க்கவிஞர் பாரதி, ‘சேதுவை (பாலம்;) மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்று பாடினார். ஈழத்தை, தமிழகத்தோடு பாலத்தால் இணைப்போம் என்பதே இதன் பொருள் ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட கடலை ஆழப் படுத்தும் சேது சமுத்திரத் திட்டத்தால், ஈழம் இந்தியாவிலிருந்து முற்றாக அன்னியப் படுத்தப் படும். ஈழத்தை அன்னியப் படுத்துவது திமுகவின் கொள்கை. ஈழத்தை நட்பு நாடாக கொண்டாடி தமிழீழக் கனவு தகர்ந்ததற்கு காரணமானது காங்கிரஸ். ஈழம் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் காங்கிரஸையே பின்பற்றி வருவது பாஜக. இந்த நிலைமைகளில், உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு பாஜக நடுவண் அரசு என்ன பதிலை தந்தாலும், தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,636
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.