தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாக சட்டம்- ஒழுங்கு
ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றுள்ளது.
பெரிய அளவில் எங்கும் வன்முறைச் சம்பவங்களோ, மோதலோ நடைபெறவில்லை. இந்தத் தேர்தலில் 5 பேர் இறந்துள்ளனர். இதில் அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டத்தில் வளர்மதி என்ற பெண் மின்னல் பாய்ந்து இறந்துள்ளார். மீதி 4 பேர் நெஞ்சு
வலியால் இறந்துள்ளனர். திருவண்ணாமலை, மதுரை,
தேனி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அருகே இரு கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டது.
காவல் துறை விரைந்து செயல்பட்டதால், தகராறு உடனடியாக தீர்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் அருகே சீமனேந்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என தகராறு செய்து,
வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்த கோபால் என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல மதுரையில் வாக்காளர்களுக்குப்
பணம் விநியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூரில் வாக்காளர்களை வாகனத்தில் ஏற்றி வந்த, அரசியல் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை தவிர்த்து
மாநிலம் முழுவதும் தேர்தலில் பிரச்னை ஏற்பட்டதாக மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
என்றார் அவர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.