Show all

புழல்சிறையில் அடைப்பு! ஐபிஎல் கேளிக்கை நிகழ்ச்சிக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர்

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், உழவர் சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் திடலில் சென்னை தனியார் இலாபத்திற்காக நடத்தப் படும் கேளிக்கை நிகழ்ச்சியான ஐ.பி.எல்.போட்டியை போராட்டச் சூழ்நிலையில் நடத்தக்கூடாது. மீறி போட்டி நடந்தால், திடலில் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பல்வேறு அமைப்புகள் கூறியிருந்தன.

ஆனால், ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அறிவித்தது. பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள், அதி தீவிரப்படை வீரர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதேவேளையில் ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

சேப்பாக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 63 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 75 பேர், நாம் தமிழர் கட்சி 237 பேர், தமிழர் எழுச்சி இயக்கத்தின் 32 பேர் என மொத்தம் 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் திடல் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அண்ணாசாலையில் மறியலின் போது துணைஆய்;வாளர் உட்பட 3 காவலர்களைத் தாக்கியதாகவும்,  திடலுக்குள் காலணி வீசியதற்காகவும் 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளர்.  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,754.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.