Show all

தமிழக ஆட்சியைத் தீர்மானிக்க விருக்கும் இராதாகிருட்டினன் நகரில் ஏழு முனைப் போட்டி

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இடைத்தேர்தல் நடைபெறும் இராதாகிருட்டினன் நகர் தொகுதியில் இன்றுடன் வேட்புமனு பதிகை முடிவடைகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சையாக தினகரன் உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றன. மதுசூதனன் கூடுதலாக 3 மனுக்களும், மருதுகணேஷ் கூடுதலாக ஒரு மனுவும் கொடுத்து இருக்கிறார்கள்.

வேட்புமனு பதிகை செய்ய இன்று (திங்கட் கிழமை) கடைசி நாள் ஆகும். பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்பு மனு பதிகை செய்ய இருக்கின்றனர். மேலும், சில சுயேச்சை வேட்பாளர்களும் மனு பதிகை செய்ய உள்ளனர்.

நடிகர் விஷால் இன்று மதியம் 12.30 மணி அளவில் சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக அவர் இன்று காலை 9 மணி அளவில் சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு தேர்தல் கருத்துப் பரப்புதல் சூடு பிடிக்கும்.

போன முறை போல இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் பலர் ஆர்வம் காட்டவில்லை.

இராதாகிருட்டினன் நகர் தொகுதியில் 1.கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) 2.சுயேச்சையாக தினகரன்,

3.மருதுகணேஷ் (தி.மு.க.),

4.மதுசூதனன் (அ.தி.மு.க.),

5.ஜெ.தீபா,

6.நடிகர் விஷால்

7. கரு.நாகராஜன் (பா.ஜனதா), ஆகியோரும் போட்டியிடுவதால் 7 முனை போட்டி ஏற்படுகிறது.

பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விஷால் கடும் போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. விஷால் போட்டியிடுவதால் ஓட்டுகள் கணிசமாக பிரியும் என்றும், குறைந்த ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

மதுசூதனன் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் அவரது வெற்றி சுலபமானது என்று அ.தி. மு.க.வினர் கூறுகிறார்கள்.

ஆனால், ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியும், தினகரன், ஜெ.தீபா ஆகியோர் அ.தி.மு.க ஓட்டுகளை பிரிப்பதும் தனக்கு வெற்றியை தேடித்தரும் என்று தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் நம்புகிறார்.

மேலும் கூட்டணி கட்சிகளின் பலமும் அவருக்கு இருப்பதால் தி.மு.க.வினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,625

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.