10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை தலைமை அமைச்சராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சே இலங்கையின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு இதில் தலையிட்டு ராஜபக்சேவின் சட்டவிரோத நியமனத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது சட்டதிருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி தலைமை அமைச்சரை நீக்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், சட்டவிரோதமாக இலங்கை அதிபர் மைத்திரிபாலா தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை தலைமை அமைச்சராக நியமித்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் முதன்மை குற்றவாளி ராஜபக்சே. ஐநா மனித உரிமை அமைப்பு இதுதொடர்பாக முன்னெடுத்த விசாரணை இன்னும் நிறைவு பெறாத நிலையில் ராஜபக்சவை தலைமை அமைச்சராக நியமித்திருப்பது இலங்கை சட்டங்களுக்கு மட்டுமின்றி சர்வதேச நியதிகளுக்கும் எதிரானதாகும். இலங்கை அதிபர் செய்துள்ள இந்த அதிரடி மாற்றம் இந்துமாக்கடலில் மேலாதிக்கம் செய்ய முற்பட்டுள்ள சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இலங்கை அதிபரின் நடவடிக்கையை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். ஈழப் போரில் விடுதலை புலிகளை அழிக்க சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் இணைந்துதாம் இலங்கைக்கு ஒத்துழைத்ததாக, அதுவும் இந்தியா வேதியியல் ஆயுதங்கள் வழங்கியதாக விக்கிபீடியாவில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரை காங்கிரசும் சரி, பாஜகவும் சரி நிபந்தனை அற்ற ஒத்;துழைப்பு வழங்குவதையே கொள்;கையாகக் கொண்டுள்ளன. ரணில் உறுதியாக இந்திய ஆதரவாளர்தான். அதுதான் அவரின் இந்த நிலைக்கும் காரணம். ஆனால் என்ன செய்ய? அவர் தமிழர்களுக்கும் ஆதரவாளர் ஆயிற்றே. காங்கிரஸ், பாஜகவைப் பொறுத்தவரை, இவர்கள் அகராதியில் சிங்கள் பேரினவாத ஆதிக்கமே இலங்கை என்பதாகும். ரணில் விக்கிரம சிங்கேவைக் காப்பற்ற இவர்களை அழைப்பது பாலுக்கு பூனையை காவலுக்கு வைப்பதே சரி என்று வாதிடுவதற்கு ஒப்பானதாகும். கொஞ்சம் அமைதியாய் இருங்கள் திருமா. உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,953.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.