Show all

ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை! மேத்யூ வீசிய அடுத்த குண்டு; வெடிக்குமா? பிசுபிசுக்குமா

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று  இதழியலாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார். 

கொடநாடு மனைச்சொத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படக் காணொளியை தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. 

இந்த நிலையில் மேத்யூ சாமுவேல் சென்னை வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், மம்தா கூறுகிறார் என் பின்னால் பாஜக இருப்பதாக; முதல்வர் பழனிச்சாமி கூறுகிறார் என் பின்னால் திமுக இருப்பதாக; உண்மையை சொல்ல போனால் என்னை யாரும் இயக்கவில்லை, என் பின்னால் யாரும் இல்லை. கேரளாவில் இருக்கும் சயோனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்து கொள்ளலாம். சென்னைக்கு வருவதற்கு நான் அஞ்சவில்லை. கொடநாடு மனைச்சொத்தில் கொள்ளையைத் தொடர்ந்து 5 கொலைகள் நடந்துள்ளன. ஆவணப்படத்தை தயாரித்து பலநாட்கள் ஆகிவிட்டன. மேலும் காலம் கடத்த முடியாது என்பதால் உடனே வெளியிட்டேன். இதழியலாளர் என்ற முறையில் தகவல்களை திரட்டிக் கொடுத்துவிட்டேன். இந்தச் சம்பவத்தில் சசிகலா அல்லது தினகரன் அல்லது முதல்வர் எடப்பாடி என யாருக்கு தொடர்பிருக்கிறது என்பதை அரசு புலனாய்வு அமைப்புகள்தான் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். சசிகலாவையும் தினகரனையும் நான் ஆதரிக்கவில்லை. 

செயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவர வேண்டும். செயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் பேட்டி எடுத்துள்ளேன். அந்த மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். தன்னுடன் வர விருந்த மருத்துவர்கள் வர தயங்குகிறார்கள். ஆறுமுகசாமி ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆணைய அறிக்கை இப்படி தான் இருக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார் மேத்யூ.

செயலலிதா குற்றவாளியில்லை; சசிகலா உள்ளிட்டோர் சிறையில்; மேத்யூ வீசிய ஆவணப்படமாக முதல் குண்டு; ஆணைய அறிக்கை திட்டமிடப் பட்டதாக இப்போது மேத்யூவின் இரண்டாவது குண்டு; இதில் அரசியல் ஆதாயம் யாருக்கெல்லாம்; தொடர்புகள் யாருக்கெல்லாம்; பொறுத்திருந்து பார்ப்போம். நாடளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தெளிவு படுத்துவார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.