Show all

தமிழகத்தில் மாவோயிஸ்டு இயக்கமா

தமிழகத்தில் மாவோயிஸ்டு இயக்கத்தினர் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைதான பெண் தீவிரவாதிகள் இதுதொடர்பாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர்களது ஆட்கள் சேர்க்கும் பணியை காவல் துறையினர் முறியடித்துள்ளனர். மாவோ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் தீவிரவாதிகள் 36அகவையுள்ள ரீனா ஜாய்ஸ் மேரி, சந்திரா (50), கலா (52) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். சென்னை அருகே உள்ள படப்பை மகாலட்சுமி நகரில் ரீனா ஜாய்ஸ் மேரி கைதானார். கரூரில் கலாவும், சந்திராவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரிடமும் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மாவோ தீவிரவாத இயக்கம் முழுமையாக வளரவிடாமல் தடுத்துள்ளோம். ‘தமிழ்நாடு மாவோயிஸ்டு’ என்ற இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இதுபோன்ற மாவோயிஸ்டு இயக்கம் ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மற்ற வடமாநிலங்களில் பெரிய அளவில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆந்திராவில் பஸ்பர் காட்டுப்பகுதியிலும், தண்டகாருன்யா காட்டுப்பகுதியிலும் ‘மாவோ’ தீவிரவாதிகள் பெரிய அளவில் முகாம் அமைத்து பதுங்கி வாழ்கிறார்கள். அந்த இயக்கத்தின் தலைவர்கள் தமிழகத்திலும், ஒரு பெரிய தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த முயற்சியை ஏற்கனவே தமிழக காவல்துறையினர் பலமுறை முறியடித்துள்ளனர். 2008-ம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியிலும், வருசநாடு மலைப்பகுதியிலும் அவர்கள் முகாம் அமைத்தபோது முக்கியமான ‘மாவோ’ தீவிரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாவோ தீவிரவாதிகள் குண்டு காயத்துடன் பிடிபட்டார்கள். 2002-ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இதுபோல் பயிற்சி முகாம் அமைத்தபோது காவல்துறையினர்துப்பாக்கிச் சூடு நடத்தி 29 பேரை கைது செய்தனர். இதில் பார்த்திபன் என்ற ‘மாவோ’ தீவிரவாதி கொல்லப்பட்டார். இதுபோல் அவர்கள் முளைவிட முயற்சிக்கும்போதெல்லாம் கிள்ளி எறியப்படுகிறார்கள். சமீபத்தில் கோவையில் 5 ‘மாவோ’ தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சொன்ன தகவலில் தமிழகத்தில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதை அடிப்படையாக வைத்து ஐ.ஜி. சத்தியமூர்த்தி, டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில், கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்தக் கண்காணிப்பின் அடிப்படையில்தான் பெண் தீவிரவாதி ரீனா சென்னை அருகே படப்பையிலும், கலா மற்றும் சந்திரா என்ற மேலும் 2 பெண் தீவிரவாதிகள் கரூரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ரீனா ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரா, கலா ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பெண் ‘மாவோ’ தீவிரவாதிகளும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் பணிபுரிந்துள்ளனர். கல் குவாரிகளில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்துள்ளனர். இதுபோல் வேலை பார்த்துக்கொண்டே ‘மாவோ’ தீவிரவாத இயக்கத்திற்கு சென்னை, காஞ்சீபுரம் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் ஆட்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பாவி இளைஞர்களையும், இளம்பெண்களையும் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்டுகளாக மாற்றும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆட்கள் சேர்க்கும் பணி முடிந்தவுடன் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் இடமான ‘முச்சந்திப்பு’ என்ற இடத்தில் பெரிய அளவில் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தப் பயிற்சி முகாமில் ஆந்திராவிலிருந்து தீவிரவாதி பத்மா உள்ளிட்ட ‘மாவோ’ தலைவர்கள் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. 3 பெண் தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டதன் மூலம் மேற்கண்ட பயிற்சி முகாம் நடத்தும் முயற்சியும், ஆள்எடுக்கும் பணியும் முழுவதுமாக முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ‘மாவோ’ தீவிரவாத அமைப்பை வேரோடு அழிக்கும் முயற்சியில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.