Show all

5121வது தமிழ்ப்புத்தாண்டில் நிமித்தம் குறித்து அறிவோம்!

நிமித்தம் என்ற தலைப்பு தமிழர்தம் நிமித்தகம், கணியம், சாதகம், சோதிடம், வானியல், காலக்கணக்கு என்பனவற்றுக்கெல்லாம் தொடக்கமாக இருந்திருக்கிது.

 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிமித்தம் என்பது தமிழ் மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். பண்டைய நிமித்தங்களையும் அவற்றின் பால் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் இலக்கியங்களின் வழியே நாம் அறியலாம். 

சங்க கால இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, இராமாயணம் ஆகிய இலக்கியங்கள் மட்டுமின்றி நாட்டுப்புற இலக்கியங்கள் வழியாகவும் தமிழர்களின் நிமித்தம் குறித்த நம்பிக்கைகளை அறியலாம். இன்றும் மக்களிடையே சில நிமித்தம் நன்மையைத் தருவன (நன்னிமித்தம்) என்றும், சில நிமித்தங்கள் தீயன (தீநிமித்தம்) என்றும் கருதப்படுகிறது. 

நிமித்தக் குறியீடுகள், தமிழர்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களையோ அல்லது தீய பலன்களையோ உறுதியாக ஏற்படுத்தியுள்ளமையால் நிமித்தம் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி விட்ட நிலையினை இன்றும் நம்மால் அறியமுடிகிறது.

இந்த நிமித்தக் கூறுகள் மக்களின் மனபோக்கிற்கு ஏற்பவும் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவும் மாறுபடும் தன்மையுடையனவாக விளங்குகின்றன. மக்கள் வாழ்க்கையில் எதிர் கொண்ட நிகழ்ச்சிகளின் செயல்பாட்டின் அனுபவங்களைப் பிரதிபலிக்கக் கூடியனவாக நிமித்தம் இன்றும் மக்களின் வாழ்வில் இடம் பெற்றிருக்கின்றன.

நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக தமிழர்களால் தொன்றுதெட்டு இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன. அதாவது நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்துவதாகும். 

தமிழன்தான் செய்ய நினைக்கும் செயலின் பால் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு இருப்பதாக உணரத்  தொடங்கிய காலகட்டத்தில் மனித வாழ்வில் நிமித்தங்கள் சிறப்பிடம் பெற்றிருக்கக் கூடும் எனலாம். 

நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. 

புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது

(இனி நாம் பேசப்போகிற நிமித்தங்கள் ஆரியர் நம்மோடு கலந்து விட்ட பிறகு அறிவுத்தன்மை படிப்படியாகக் குறைந்து கதை, கற்பனைத் தன்மை மிகுந்து விட்ட கால நிமித்தங்களாகும்.)

சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது. நிமித்தம் என்ற சொல்லுக்குத்

காரணம், நிமித்தம், சகுனம், அடையாளம், பொருட்டு என்ற ஐந்து பொருட்கள் உள்ளன.

இலக்கியங்களில் பெரும்பாலும் கனவுகளில் இயற்கைக்கு முரண்பாடான அச்சந்தரக்கூடிய சில செயல்நிகழ்வுகளிலும், இயற்கைத் தன்மைக்கு மாறுபட்ட நிகழ்ச்சி மற்றும் சூழ்நிலை வயப்பட்ட பொருட்களின் செயல்களிலும் நிமித்தங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுப்புற இலக்கியங்களில் கனவுகளில் மட்டுமின்றி இயற்கையையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

மகளிர்க்குக் கண், புருவம், நெற்றி, முதலியன இடம் துடித்தல் வரும் நன்மையை உணர்த்தும் நன்னிமித்தம் ஆகும் என்பதனை இலக்கியங்கள் சுட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தில்; இந்திர விழா ஊரெடுத்த காதையில் விழா நாளன்று கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தமை கண்ணகிக்கு நன்மை மற்றும் மாதவிக்கு தீக்குறியாகக் காட்டப்பட்டுள்ளன

கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் தீ நிமித்த குறிகளாக சுட்டப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கதைப்பாடல்களில் உணர்த்தப்படும் நிமித்தங்களை அவற்றின் பண்பின் அடிப்படையில் நான்கு விதமாகக் கொள்ளலாம்.

கனவில் நேரிடையாகத் தெய்வம் வந்து உரைத்தல் தன் நிமித்தக் குறியீடாக அமைதல்.

கனவில் மட்டுமின்றி நேரடியாகத் தோன்றும் சில இயற்கை நிகழ்வுகள் தீ நிமித்தக் குறியீடாகக் கொள்ளுதல்.

கனவில் இன்றி வாழ்விலும் நேரிடையாக நடைபெறும் சில நிகழ்வுகள் நல்ல சகுனமாக அமைதல்.

சோதிடர் கூற்றினைப் பின்னர் நிகழக்கூடிய நிகழ்வுகளின் குறியீடாக ஏற்றுக் கொள்ளல்.

முத்துப்பட்டன் கதைப்பாடலில், பட்டனின் கனவிலும், அவனது மனைவியர் கனவிலும்

கருமயிலைக்காளை கிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறத்தல்

கையில் கட்டிய காப்புநூலை கறையான் அரித்தல்

பட்டிநாய் ஊளையிட்டு சுவாமிமேல் புரண்டழுத செயல்

கொள்ளிவாய்ப் பேய்கள் வந்து பந்தம் கொளுத்திடக் காணுதல்

தாலி மடை முறிந்து தெருவினில் விழுந்திடல்

போன்றன அவன் பின்னால் வெட்டுப்பட்டு இறக்கப் போவதை உணர்த்துகின்றன.

கோவலன் கதைப்பாடலில் கோவலன் வீடுவிட்டு வரும்போது நடந்த நிகழ்ச்சிகள் அவனுக்கு ஏற்படப்போகும் தீமையினை உணர்த்தியதினை,

பல்லி பலபலவெனக் கத்துதல்

பனைமரத்தில் ஆந்தை அலறுதல்

குட்டியிட்ட கறும்பூனை குறுக்காக வருதல்

தலைமொட்டையடித்தோர் எதிரில் வருதல்

ஆகியன தீ நிமித்தங்களாகக் குறிக்கிறது.

நல்லதங்காள் கதைப்பாடலிலும் நல்லதங்காள் கணவன் சொல்லைக் கேளாமல் தாய் வீட்டுக்குச் செல்லுகையில் அவளுக்கு எதிர்ப்பட்ட கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறிகளாக உரைக்கப்பட்டுள்ளன.

கன்னிகழியாப் பெண் கையில் நெருப்பெடுத்தல்

வெளுத்த புடவையைக் காணுதல்

சாரைப்பாம்பு குறுக்கே செல்லுதல்

பூனைகுறுக்கே செல்லுதல்

புதுப்பானை முன்செல்லுதல் 

தமிழர் நிமித்தங்கள் ஆரியர் வந்து கலந்த பின் நிறைய கதை கட்டப் பட்டு விட்டது. அறிவுக்குப் பொருந்திய நிமித்தங்களை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்த வேண்டிய தமிழர்- 

ஐரோப்பியர் வரவு மற்றும் பெரியார் காலத்திற்குப் பிறகு நிமித்தம் தொடங்கி, தமிழர் தொடர் ஆண்டுக் கணக்கு வரை அனைத்தையும் மூடநம்பிக்கையாக புறக்கணிக்கத் தொடங்கி விட்டோம்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,122.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.