Show all

அய்யாக்கண்ணு தலைமையில் நடிகர் ரஜினிகாந்துடன் உழவர்கள் சந்திப்பு

தமிழக உழவர்கள், தென்னக நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வேளாண் கடன்களை ரத்து செய்யும்படி நடுவண், மாநில அரசுகளை வற்புறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

     இந்த நிலையில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட உழவர்கள் நேற்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள்.

     ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

     ரஜினிகாந்தை நாங்கள் சந்தித்து பேசினோம். எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறினோம். அப்போது எங்களிடம் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, காவிரி நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்றார். அதுபோல் நேத்ராவதி நதியையும் காவிரியில் இணைக்க வேண்டும் என்றார்.

     இந்த நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு விட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் கூறினார். நதிகள் இணைப்புக்கு தருவதாக சொன்ன ரூ.1 கோடியை இப்போதே உங்கள் கையில் தந்து விடுகிறேன் என்றும் ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் அந்த தொகையை வாங்கவில்லை. ரூ.1 கோடியை பிரதமரிடம் நேரில் கொடுத்து, நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கும்படி வற்புறுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டோம். ரஜினிகாந்தும் அதை நான் செய்து தருகிறேன் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார்.

இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.