Show all

நடுவண் பாடத்திட்டப் பள்ளிகளுக்கு அறங்கூற்றுவர் இறுதி எச்சரிக்கை! தங்கள் பள்ளிக் குழந்தைகள் கொடுமைப்பாட்டிற்கு

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வழக்கறிஞர் புருசோத்தமன் அவர்கள் சென்;னை உயர் அறங்கூற்று மன்றத்தில், 'கல்வி கற்பித்தல்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக ஒரு வழக்கு பதிகை செய்துள்ளார்.

அந்த மனுவில், 'தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின், பாடத்திட்ட விதிகளை மீறி, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன. குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின், பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் என்.கிருபாகரன், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது எனவும், மற்ற வகுப்புகளுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின், பாடத்திட்டத்தை மட்டுமே கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் அறங்கூற்றுவர் என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என அனைத்து மாநில நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளுக்கும் 2 முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நடுவண் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டுமென நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அறங்கூற்றுவர் என்.கிருபாகரன், 'இந்த உத்தரவை செயல்படுத்த ஏற்கெனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வரும் வெள்ளிக் கிழமைக்குள் இது தொடர்பாக நடுவண் அரசு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்களையும் அறங்கூற்றுமன்றத்தில் நேரில் அணியமாக உத்தரவிட நேரிடும்' என கடுமையாக எச்சரித்து விசாரணையை வரும் வெள்ளிக் கிழமைக்கு  தள்ளிவைத்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,876.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.