Show all

பாஜக-0 அதிமுக-0 மற்றகட்சிகள்-0 திமுக கூட்டணி-40 நாடளுமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாநில கட்சிகள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்குமோ அந்த கட்சிதான் அடுத்த முறை நடுவண் அரசில் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏபிபி சி ஆய்வு, இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் ஆய்வு, ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆய்வுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியன் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்லாது. காங்கிரஸ் - திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 (புதுச்சேரி 1) தொகுதிகளை வெல்லும். மற்ற சிறிய (திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள்) கட்சிகள் எங்குமே வெற்றி பெறாது என தெரிவிக்கிறது.

ஏபிபி சி வாக்காளர் ஆய்விலும் இதேதான் கூறப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகதான் மொத்தமாக வெற்றிபெறும். அதாவது திமுக - காங்கிரஸ் - சிறிய கட்சிகளின் கூட்டணி மொத்தம் 40 இடங்களில் வெல்லும். பாஜக - அதிமுக கூட்டணி அமைத்தாலும், அமைக்கவிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று ஏபிபி சி வாக்காளர் ஆய்வு கூறியுள்ளது.

இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் கருத்து கணிப்பின்படி தென்னிந்தியாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிதான் வெல்லும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று அனைத்து மாநிலத்திலும் கணிசமான இடங்களை காங்கிரஸ் வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை 40 இடங்களையும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

அனைத்து கருத்து கணிப்பின் முடிவிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து கணிப்புகளும் சொல்லி வைத்தார்போல 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று கூறி இருக்கிறது. பாஜக - அதிமுக கூட்டணி வைத்தாலும் இதே முடிவுதான் வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் திமுக 30 இடங்களை தனியாகப் பெறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாற வாய்ப்புள்ளது. தற்போது அதிமுகதான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. அந்த இடத்தை திமுக பெற்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது. கருத்து கணிப்புகள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேசமயம், வாக்கு எந்திரங்கள் மூலமான வாக்குப் பதிவு என்றால், முடிவுகள் தாறுமாறாகலாம் என்ற அச்சம் அரசியல் நோக்கர்களிடம் இருந்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.