Show all

பாராட்டுவோம்! தடைபெற்ற தமிழகஅரசை. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்; உச்ச அறங்கூற்றுமன்றம் இடைக்காலத் தடை

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

அதில், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்குகிறது. நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு இலவச இடம் வழங்கினால் போதுமானது. ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை இங்கு தொடங்க முடியவில்லை. எனவே, தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறுகட்ட விவாதங்களுக்குப் பிறகு-

தமிழகத்தில் நடுவண் அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்க அனுமதி அளிப்பது குறித்து 8 வாரத்துக்குள் முடிவு எடுத்து அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

அனுமதி அளிப்பதோடு இல்லாமல், உள்கட்டமைப்பு ஏற்படுத்தவும் தமிழக அரசு உதவ வேண்டும். பள்ளிகள் அமைய 25 ஏக்கர் நிலம் வழங்குதல், தடையில்லா சான்று விரைவில் பெற உதவுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

  • தெரிவித்த அறங்கூற்றுவர்கள் வழக்கினை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

உயர் அறங்கூற்றுமன்ற கிளையின் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது இந்த மேல்முறையீட்டின் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் நவோதயா பள்ளிகளைத் திறக்க போதிய அவகாசம் இல்லை என்ற தமிழக அரசின் வாதங்களை ஏற்று, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அறங்கூற்றுவர்கள் இடைக்காலத் தடை விதித்தனர்.

தமிழகத்திற்கு நடுவண் அரசின் பாடத்திட்டத்திலான இந்தப் பள்ளிகள் தேவையேயில்லை என்பதுதாம் உண்மை; அந்த உண்மையை நிறுவ தமிழக அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தின் மூலம் கால அவகாசம் பெற்றிருப்பது பாராட்டுக்கு உரியதுதான்; ஆனாலும் தமிழக அரசு தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல் நிலை நாட்டுவதில் தான் தமிழக மக்களுக்கான வெற்றி இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.