வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்ப்பு-நீக்கல் போன்றவற்றுக்காக விண்ணப்பம் அளிக்கும் பணி முடிவடைந்ததாக தலைமைத்
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து அவர்
மேலும் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்
போன்றவற்றுகாக இதுவரை 6.55 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அதில், 6.22 லட்சம்
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, மனுதாரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ஆம்
தேதிக்குள் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். பெயர்
நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கே அதிகமானோர் மனுக்களை அளித்துள்ளனர். பெயர்-முகவரி மாற்றங்களுக்கு
மனு அளித்தோருக்கு புதிதாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை அளிக்கப்படாது. வாக்காளர் பட்டியலில்
பெயர் விடுபட்டவர்கள் மட்டும் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை பெயர் சேர்க்க மனுக்களை அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை செல்லிடப் பேசி குறுஞ்செய்தி (EPICspaceVoter ID Card No. to 9444123456) அனுப்பி
தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பணியில்
ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டமாக,
வரும் 24-ஆம் தேதியன்று பயிற்சி அளிக்கப்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.