Show all

நடுவண் மற்றும் 11மாநில அரசுகளுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவு! காஷ்மீரிகளுக்கு எதிரான தாக்குதலை தடுக்க

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அளவில் நடத்தப்பட்டுவரும், தாக்குதலைத் தடுக்க நடுவண் அரசும்,  11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

மேலும், காஷ்மீர் மக்களை சமூக ரீதியாக ஒதுக்கிவைத்தல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய செயல்களையும் 11 மாநில அரசுகளும் தடுக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்தது.

புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்தத் தாக்குதலுக்குக் காரணம், ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதே என்று வெகுமக்கள் ஊடகங்கள் பரவலாக கருத்துப் பரப்புதல் செய்த நிலையிலும்: 

இந்தத் தாக்குதலுக்கு காரணம் காஷ்மீர் மக்களின் பிரிவினை வாத உணர்வே என்றும், அவர்களே புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்றதற்கான அடிப்படையென்றும், ஹிந்துத்துவா அமைப்புகளால் மற்றொரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப் பட்டு இந்தியா அளவில் காஷ்மீரிகள் தாக்கப் பட்டு வருகின்றனர்.

இந்திரா காந்தி படுகொலையின் போது சீக்கியர்கள் தாக்கப் பட்டது போல, ராஜீவ் காந்தி படுகொலையின் போது திமுகவினர் தாக்கப் பட்டது போல, தற்போது புல்வாமா இராணுவ வீரர்கள் படுகொலைக்கு:

பல்வேறு மாநிலங்களில் கல்வி, பணி, மற்றும் வணிகம் நிமித்தமாக தங்கி இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், காஷ்மீரைச் சேர்ந்த மக்கள், தங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களை விட்டு, மீண்டும் காஷ்மிருக்கு திரும்பினார்கள். 

மேகாலயா ஆளுநரும், காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, உச்ச அறங்கூற்று மன்ற வழக்கறிஞர் தாரிப் அதீப் உச்ச அறங்கூற்று மன்றத்தில் மனு ஒன்றை பதிகை செய்திருந்தார். 

அதில், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் மக்களுக்கு எதிராக பிஹார், சத்தீஸ்கர், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுகின்றன, அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஆதலால் உச்ச அறங்கூற்றுமன்றம் தலையிட்டு, காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும்  தாக்குதல்கள், சமூக புறக்கணிப்புகள், அச்சுறுத்தல்கள், துரத்தல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாநிலங்களுக்கும், நடுவண் அரசுக்கும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மற்றும் அறங்கூற்றுவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்கூற்றுவர்கள் பிறப்பித்த உத்தரவில், 'புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதலை, குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் தடுக்கப் பட வேண்டும்.

காஷ்மீர் மக்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ள 11 மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அந்த 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள்  ஆகியோர் மனுதாரர்கள் அளிக்கும் புகார்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

பசு குண்டர்களைத் தடுக்க அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான காவல் துறையினரே, காஷ்மீர் மக்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளையும் விசாரிக்க வேண்டும், அதற்குரிய பொறுப்பாவார்கள்.

நடுவண் உள்துறை அமைச்சகம் விரிவான விளம்பரங்களை  அளித்து, அந்தந்த பொறுப்புள்ள அதிகாரிகள் காஷ்மீர் மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக 11 மாநிலங்களுக்கும், நடுவண் அரசுக்கும் அறிவிப்பு அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிடுகிறோம்.' எனத் தெரிவித்தனர்.  அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,071. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.