Show all

ஆளத்தெரியாமல் புலம்பும் வக்கற்ற கட்சியை! அகற்ற வேண்டியது அக்கட்சியின் புலம்பலுக்குக் காரணமான இலவசத்தை அல்ல

இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று வியந்து புலம்பி இருக்கிறது நமது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வங்கி. 

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப் போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று வியந்து புலம்பி இருக்கிறது ஒன்றய அரசின் கட்டுப்பாட்டு வங்கி. 

இந்திய ஒன்றியத்தில், ஒன்பது மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு இலவசத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப்போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று சொல்லி இருக்கிறது நமது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டு வங்கி. 

ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே தேர்தலுக்கு முன்பு அறிவித்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.67,000 கோடியைத் தங்கள் மாநில வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கி இருப்பதாக ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி புலம்பி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ரூ.8,480 கோடியும், ஜார்க்கண்ட் ரூ.6,655 கோடியும், பீகார் ரூ.1,300 கோடியும், அரியானா ரூ.639 கோடியும், கேரளா ரூ.50 கோடியும் மக்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கி இருக்கின்றன.

இதில் ஆந்திரா மட்டுமே ரூ.27.541 கோடி ஒதுக்கி இருக்கிறது. இது அந்த மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையில் 3.64 விழுக்காடாம். அதே போல, மத்தியப் பிரதேச மாநிலம் ரூ.21,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இது அந்த மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையில் 4.56விழுக்காடாம். மேற்கு வங்காளம் ரூ.18,877 கோடியை ஒதுக்கியுள்ளது. இது அந்த மாநிலத்தின் 3.64விழுக்காடாம். இருந்து விட்டு போகட்டுமே வெறுமனே ஒன்றைப்படை எண்ணில்தானே இந்த விழுக்காடுகள்.

இந்த இலவசங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி மறு உற்பத்திக்கு இடும் அடிஉரம் அல்லவா! வெட்டியாக உள்ள அரசு துறைகளையெல்லாம் பட்டியல் இடுங்களேன். அதில் ஒரு அதிகாரி வாங்கும் (மறு உற்பத்தி சாராத, சமூக ஏற்றதாழ்வுக்கான) சம்பளத்;தில் பத்தாயிரத்தில் ஒரு பங்காக அல்லவா இருக்க முடியும் இந்த இலவசங்கள்.

சரக்கு சேவைவரி ஆணையம் குறைந்த பட்சமாக 5விழுக்காடு, எனத் தொடங்கி 12விழுக்காடு, 18விழுக்காடு மற்றும் 28விழுக்காடு ஆகிய நான்கு வரி அடுக்குகளின் கீழ் 1300 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 500 சேவைகளை சரக்குசேவை வரியின் கீழ் பொருத்தியுள்ளது.

வருமான வரியைப் பொறுத்தவரை குறைந்த பட்சமாக 5விழுக்காடு, 20விழுக்காடு, 30விழுக்காடு என்று நீள்கிறது. மக்களிடம் இருந்து இத்தனை ஆதாயம் பார்க்கும் அரசு கீழ்தட்டு மக்களுக்கு முழுவாழ்க்கையையுமே பார்க்க வேண்டும் என்பதே முறையாகும். அனால் ஐந்துக்கு குறைவான விழுக்காட்டு இலவசத்திற்கு புலம்பி மக்கள் தளத்தி;ல் இருக்கும் மாநில அரசுகளை குற்றம் சாட்ட முயல்கிறது என்றால் இங்கே அகற்ற வேண்டியது ஒன்றிய அரசின் புலம்பலுக்குக் காரணமான இலவசத்தை அல்ல! ஆளத்தெரியாமல் புலம்பும் வக்கற்ற கட்சியை அல்லவா?

இலவசத் திட்டங்கள் அளிப்பதில் மாநில அரசாங்கங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்வது இலவச மின்சாரத்தை வழங்குவதில்தான் என்று ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி புலம்புவதன் உள்நோக்கத்தை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

மத்தியப் பிரதேசம் மட்டும் மின்சார மானியம் அளிப்பதற்காக ரூ.21,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ரூ.6,655 கோடியும், ஆந்திரா ரூ.5,000 கோடியும், பஞ்சாப் ரூ.5,000 கோடியும் ராஜஸ்தான் ரூ.4,500 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.

ஒன்றிய கட்டுப்பாட்டு வங்கி அளித்திருக்கும் இந்தப் புள்ளிவிவரங்களை எல்லாம் பார்க்கும்போது, மாநில அரசாங்கங்கள் இலவசத் திட்டங்களுக்கான செலவு செய்வதையும், மானியங்கள் அறிவிப்பதையும் தவறா என்கிற கேள்வி எழுகிறது. 

மாநிலத்தை ஆளும் அரசுகள். இலவசத் திட்டங்கள் அல்லது மானிய உதவி தருவதற்கான காரணம், இன்றைக்கு கிராமப் பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் பல கோடி பேர் இருக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்பது அவர்கள் வாழ்க்கையில் இன்னும் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. இந்த நிலையில், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனில், சில உதவிகளை அரசாங்கம் செய்து தந்தாக வேண்டும்.

எடுத்துக்காட்டாக கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் எரிவளி அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் எனில், அவர்களுக்கு மானிய உதவியில் அடுப்புகளையும், எரிவளி உருளைகளையும் தந்தாக வேண்டும். அப்படித் தரவில்லை எனில், அவர்களால் முழுக் கட்டணத்தையும் செலுத்தி அடுப்பையும், எரிவளி உருளையும் வாங்க முடியாது. அந்த நிலையில், மரக்கட்டைகளை எரித்துதான் சமைக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் சக்தியும் நேரமும் வீணாவதுடன், சுற்றுச்சூழலும் கெடும். எனவே, இது மாதிரியான பல விடையங்களில் அரசின் இலவசத் திட்டமும் மானியமும் கட்டாயம் தேவை.

இலவசத் திட்டங்களை நிறைவேற்றவும், மானியம் அளிக்கவும் மாநில அரசாங்கங்கள் பல லட்சம் கோடி ரூபாயை செலவழித்தால், அந்த மாநிலங்களிங்கள் பொருளாதார நிலைத்தன்மை பலவீனம் அடைவதுடன் அது நாட்டின் பொருளாதார நிலையையும் வெகுவாக பாதிக்கும். இந்த நிலை மாறவில்லை எனில், இன்றைக்கு இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு இந்தியாவுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மாநில அரசாங்கங்கள் இந்த விடையத்தில் மிக மிகக் கவனமாக செயல்பட வேண்டியது கட்டாயத்திலும் கட்டாயம் என்று புலம்பல்வாதிகள் கருத்துப் பரப்புதல் செய்கின்றனர்.

இலங்கையின் வீழ்ச்சி இலவசம் கொடுத்ததால் விளைந்த அறுவடை அல்ல. அது ஒன்றிய பாஜக அரசின் கொள்கையாக இருக்கிற மாதவாத, பேரினவாத விதைப்பில் கிடைத்த அறுவடை என்பதை உலகறியும். வரலாறு தொடர்ந்து பறை அடிக்கும். 

ஆக இந்தியாவில் களைய வேண்டியது மாநில அரசுகளின் இலவசங்கள் அல்லவே அல்ல. ஒன்றிய அரசில் இந்தியாவின் போகூழ் வாய்ப்பாக அமைந்து விட்ட ஒற்றிய பாஜக ஆட்சியே கட்டாயமாகக் களைய வேண்டியது ஆகும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,335.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.